வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Updated : ஞாயிறு, 14 மே 2017 (23:39 IST)

பஸ் ஊழியர்களின் போராட்டத்தில் திடீர் மாற்றம்: பயணிகள் அதிர்ச்சி

அரசுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் நாளை 15ஆம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என்று தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்த நிலையில், இன்று மாலையே தமிழகத்தின் பல பகுதிகளில் பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.



 


ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை உடனே வழங்கிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்த போக்குவரத்து ஊழியர்கள் தங்களுடைய கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் நாளை முதல் வேலை நிறுத்தப்போராட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்தனர்.

ஆனால் ஒருநாள் முன்கூட்டியே இன்றே பல இடங்களில் பேருந்துகள் நிறுத்தப்பட்டது. சனி, ஞாயிறு விடுமுறைக்கு பின்னர் நாளை அலுவலகம் செல்வதற்காக காத்திருக்கும் பயணிகளுக்கு இது பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை, வேலூர், நீலகிரி, திருச்சி, தஞ்சை, தேனி உள்ளிட்ட இடங்களில் இன்று மாலையே பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.