வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 16 ஜூலை 2019 (20:01 IST)

அரசு பேருந்தில் மோதி உயிர்விட்ட பெண்கள்: சென்னையில் பரிதாபம்

சென்னையில் ஒரே பைக்கில் சென்ற மூன்று பேர் அரசு பேருந்துக்கு அடியில் சிக்கியதில் இரண்டு பெண்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவா என்ற நபரும் அவருடன் பணிபுரியும் இரண்டு பெண்களும் காலை நந்தனம் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்திருக்கிறார்கள். இரண்டு பெண்களும் ஆந்திராவை சேர்ந்தவர்கள். சென்னையில் தங்கி பணிபுரிந்து வந்திருக்கின்றனர். மூவரும் ஒரே பைக்கில் பயணித்திருக்கின்றனர். நந்தனம் சிக்னல் அருகே வரும்போது, சிக்னல் விழும் முன் கடந்துவிட வேகமாய் வண்டியை ஓட்டியுள்ளார் சிவா. முன்னால் நீல நிற சட்டை அணிந்த நபர் ஒருவர் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அவரை முந்துவதற்காக வலது பக்கமாக முன்னகர்ந்த சிவா பின்னால் வந்த அரசு பேருந்தை கவனிக்கவில்லை.

பேருந்து வேகமாக வந்து மோதியதால் நிலைத்தடுமாறி அருகில் வந்த பைக்கில் மோதி கீழே சரிந்தார்கள் மூன்று பேரும்! இதையறியாத பேருந்து ஓட்டுனர் பேருந்தை ஓட்ட கீழே விழுந்தவர்கள் மேல் பேருந்து ஏறி நசுக்கியது. இதில் பெண்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சிவா உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அருகில் வந்தவர் வாகனம் மோதியதும் சுதாரித்து வண்டியை நிறுத்தியதால் பேருந்தில் விழாமல் தப்பித்தார். இந்த கோர சம்பவம் அந்த பகுதியில் சென்றவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. காலையில் வேலைக்கு செல்பவர்கள் அவசரமாக சிக்னல்களை தாண்டுவதற்காக இது போன்று வேகமாக செல்வதாக கூறப்படுகிறது.