காதலிக்க சொல்லி மிரட்டல் - மாணவி தீக்குளித்து தற்கொலை
விழுப்புரம் அருகே காதலிக்கச் சொல்லி தொடர்ந்து வற்புறுத்தியதை அடுத்து, பத்தாம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தை அடுத்த பள்ளிப்புதுப்பட்டுவைச் சேர்ந்த முருகையன் மகன் மாதவன் (18). இவர், அதே பகுதியைச் சேர்ந்த அரசன் மகள் சங்கவி (16). இவர் மண்டகப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
சங்கவி தினமும் தனது சைக்கிளில் பள்ளிக்குச் சென்று வந்துள்ளார். இதனால், அவரை மாதவன் தினமும் வழிமறித்து தன்னை காதலிக்கச் சொல்லி தொடர்ந்து வற்புறித்து வந்துள்ளார்.
இந்நிலையில், சம்பவத்தன்று தன்னை காதலிக்காவிட்டால், உன்னையும், உன் குடும்பத்தையும் அவமானப்படுத்திவிடுவதாக சங்கவியை, மாதவன் மிரட்டியுள்ளார்.
இதில் மனமுடைந்த சங்கவி, தனது உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் அவரது கை, கால், முகம் உள்ளிட்ட இடங்கள் தீயில் கருகின. இதனையடுத்து சங்கவி புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வந்த சங்கவி, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக, பள்ளிப்புதுப்பட்டு காலனியைச் சேர்ந்த அருண் என்ற இளைஞரை காவல் துறையினர் கைது செய்தனர்.