1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : புதன், 28 பிப்ரவரி 2024 (14:37 IST)

திமுக அழியும் என சொன்னவர்கள் காணாமல் போய்விட்டனர்..! பிரதமர் மோடிக்கு கனிமொழி பதிலடி.!!

Kanimozhi
திமுகவை முற்றிலும் அகற்றுவோம் என பிரதமர் மோடி கூறியிருந்த நிலையில், திமுக அழியும் என சொன்ன பலர் காணாமல் போய்விட்டார்கள் என்று திமுக எம்பி கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார்.
 
தூத்துக்குடியில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பேசிய பிரதமர் மோடி, திமுகவை இனி தேடினாலும் கிடைக்காது என்றும் திமுகவை முற்றிலும் அகற்றுவோம் என்றும் கூறியிருந்தார். இந்த கூட்டத்தில் தூத்துக்குடி திமுக எம்பி கனிமொழியும் பங்கேற்று இருந்தார்.
 
இந்நிலையில் தூத்துக்குடியில் இருந்து சென்னை வந்த கனிமொழி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். திமுகவை முற்றிலும் அகற்றுவோம் என பிரதமர் தெரிவித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்து பேசிய கனிமொழி, திமுக அழியும் என சொன்ன பல பேர் காணாமல் போய்விட்டதாக தெரிவித்தார். 

நல்ல திட்டங்களை திமுக எப்போதும் எதிர்பதில்லை என தெரிவித்த அவர், தேர்தலுக்காக தமிழகத்திற்கு சில திட்டங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது என்று விமர்சித்துள்ளார்.
 
குலசேகரன் பட்டினத்தில் ஏவுதளம் கொண்டுவர திமுக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும், குலசேகரபட்டினம் ஏவுதளம் திமுகவுக்கு கிடைத்த வெற்றி எனவும் கனிமொழி தெரிவித்துள்ளார்.
 
புயல் வெள்ளத்திற்கு மத்திய அரசு இதுவரை நிவாரணம் வழங்கவில்லை என குற்றம் சாட்டிய அவர், பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்கு கால்வாசி தொகையை மட்டுமே மத்திய அரசு வழங்குகிறது எனவும் விமர்சித்துள்ளார்.

 
இதுவரை முதலமைச்சர் முன்வைத்த கோரிக்கைகள் எதையும் மத்திய அரசு நிறைவேற்றவில்லை என்று திமுக எம்பி கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.