வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Updated : ஞாயிறு, 6 அக்டோபர் 2019 (15:40 IST)

”தேச துரோக வழக்கு, அரசியலமைப்பு அவமதிப்பு” திருமா குற்றசாட்டு

பிரதமருக்கு கடிதம் எழுதிய மணிரத்னம் உட்பட 49 பேர் மீது தேச துரோக வழக்கு பாய்ந்த்தை கண்டித்து பேசியுள்ளார் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்.

இந்தியாவில் ஆங்காங்கே மதத்தின் பெயரால், சிறுபான்மையினர் மற்றும் பட்டியலினத்தவர்கள் மீதும் தாக்குதலுக்கு உள்ளாகும் சம்பவம் நடந்துவருகிறது. குறிப்பாக இஸ்லாமியர்கள் மதத்தின் பெயரால் கொல்லப்படும் கொடூரமும் நடந்துவருகிறது. இதனிடையே இது போன்ற தாக்குதல்கள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், இதனை உடனே தடுக்கவேண்டும் எனவும் இயக்குனர் மணிரத்னம், அனுராக் காஷ்யப், அடூர் கோபாலகிருஷ்ணன், வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா உள்ளிட்ட 49 பேர் கடந்த ஆகஸ்து மாதம் மோடிக்கு தனது கையொப்பங்களை இட்டு கடிதம் எழுதினர்.

இதனையடுத்து மோடிக்கு கடிதம் எழுதிய அந்த 49 பிரபலங்கள் மீதும், நாட்டின் நற்பெயரை கெடுத்தல் மற்றும் பிரிவினைவாத போக்குகளை ஆதரவளித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தேச துரோகம், மற்றும் உணர்வுகளை புண்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் “பிரதமருக்கு கடிதம் எழுதினால் தேச துரோக வழக்கா?” என பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் முக ஸ்டாலின், முத்தரசன், வைகோ, உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், 49 பேர் மீதுள்ள தேச துரோக வழக்கை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், நீதித்துறையை பயன்படுத்தி கருத்துரிமையை பறிக்க முயற்சிப்பது அரசியலமைப்பு சட்டத்தையே அவமதிப்பதாகும் எனவும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் கருத்துரிமையை பாதுகாக்க ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்து பெற்று பிரதமருக்கு கடிதம் அனுப்ப முடிவு செயப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எப்பொழுதும் தனது மேடைகளில் கருத்து சுதந்திரத்தை குறித்து பேசிவரும் திருமாவளவ்வன், தற்போது 49 பேர் மீதுள்ள தேச துரோக வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.