வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : திங்கள், 11 செப்டம்பர் 2017 (09:41 IST)

ஆளுநருக்கு கெடு விதித்த ஸ்டாலின்: வரவேற்கும் திருமா!

ஆளுநருக்கு கெடு விதித்த ஸ்டாலின்: வரவேற்கும் திருமா!

ஆளும் அதிமுக அரசில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பெரும்பான்மை எம்எல்ஏக்களின் ஆதரவு இல்லாததால் அவர் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் ஒரு வார காலத்துக்குள் உத்தரவிட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கெடு விதித்திருந்தார்.


 
 
நேற்று ஆளுநரை சந்தித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்து பேசிய திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சட்டமன்றத்தை கூட்டி எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட ஆளுநருக்கு ஒரு வாரம் காலக்கெடு விதித்துள்ளோம். ஆளுநர் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் நீதிமன்றத்தை நாடுவோம் என தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் வாங்குவதாக ஆளுநரிடம் கடிதம் அளித்தனர். இதனால் எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை இழந்துவிட்டார்.
 
இதனையடுத்து எடப்பாடி பழனிசாமியை பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டிருக்க வேண்டும். ஆனால், அவர் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் ஆளுநர் இது அதிமுகவின் உட்கட்சி பிரச்சனை என கூறுவது அழகல்ல. ஆளுநர் மத்திய பாஜக அரசு சொல்வதை செய்கிறார்.
 
இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் ஆளுநரைச் சந்தித்து, எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் ஒரு வார காலத்திற்குள் உத்தரவிட வேண்டும் என அவருக்கு ஒருவார காலம் கெடு விதித்திருப்பதை வரவேற்கிறேன் என கூறினார்.