வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 21 பிப்ரவரி 2019 (15:04 IST)

சீட்டுக்காக பல்டியடித்த தம்பிதுரை – கைக்கு வந்த கரூர் தொகுதி !

தொடர்ந்து பாஜக அரசைக் கடுமையாக விமர்சித்து வந்த அதிமுக மத்திய அமைச்சர் தம்பிதுரை இப்போது அதிமுக பாஜக கூட்டணியால் மக்களுக்கு நன்மை எனக் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக-காங்கிரஸ்-விசிக-மதிமுக-இடது சாரிகள் அடங்கியப் பலமானக் கூட்டணி உருவாகியுள்ளது. அதுபோல அதிமுக-பாஜக-பாமக அடங்கியக் கூட்டணி உருவாகி தொகுதிப் பங்கீடு குறித்த விவரங்களும் வெளியாகியுள்ளது. அதுபோல தேமுதிக வும் அதிமுக அணியில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் அதிமுகவில் சிலர் பாஜகவோடு கூட்டணி வைக்கக் கூடாது என ஆரம்பம் முதலே எதிர்த்து வந்தனர். அதில் மக்களவைது துணை சபாநாயகர் தம்பிதுரையும் முக்கியமானவர். அதிமுக தலைமை பாஜக வின் கட்டுப்பாட்டிற்குள் சென்று வெகு நாட்களான நிலையில் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் பாஜகவை கஜா புயல், 10 சதவீத இடஒதுக்கீடு எனப் பல விஷயங்களை முன்வைத்துக் கடுமையாக விமர்சனம் செய்துவந்தார். மேலும் தேர்தலில் பாஜகவை நாங்கள் தூக்கி சுமக்க மாட்டோம் என வெளிப்படையாகவும் கூறினார்.

இது குறித்து அதிமுக தலைமையில் உள்ளவர்கள் இது அவரது சொந்தக் கருத்து, கட்சியின் கருத்தல்ல என மழுப்பி வந்தனர். ஆனால் இப்போது அவரது கருத்துகளை எல்லாம் தாண்டி அதிமுக பாஜக கூட்டணி உருவாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் ஒரே ஒரு எம்பி மட்டுமே உள்ள கட்சிக்கு 5 சீட்களை வாரி வழங்கியுள்ளது.
இதனையடுத்து இந்தக் கூட்டணி அமையக்கூடாது எனத் தொடர்ந்து பேசிவந்த தம்பிதுரை இப்போது ‘ இது மக்களுக்கானக் கூட்டணி… இந்தக் கூட்டணியால் மக்கள் நன்மை அடைவர்.. காங்கிரஸ் திமுக ஆட்சி அமைந்துவிடக் கூடாது என்பதற்காக அமைக்கப்பட்ட கூட்டணி’ என பல்டியடித்துள்ளார்.

தம்பிதுரையின் இந்த திடீர் மனமாற்றத்துக்குக் காரணமாக கரூர் தொகுதி அவருக்கு ஒதுக்கப்பட இருக்கிறது என்பதுவேக் காரணமாம்.