1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வியாழன், 7 செப்டம்பர் 2017 (13:53 IST)

நீட் தேர்வுக்கு எதிராக அரசு வேலையை தூக்கி எறிந்த ஆசிரியை...

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியை சபரிமாலா தனது அரசுப் பணியை ராஜினாமா செய்துள்ளார்.


 

 
பனிரெண்டாம் வகுப்பிற்கு பின் மருத்துவ கல்வியை படிக்க வேண்டுமெனில், நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என மத்திய அரசு சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. அதை நீதிமன்றமும் உறுதி செய்தது. 
 
அந்நிலையில், நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் அரியலூரை சேர்ந்த ஏழை மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரம் தமிழகத்தையே உலுக்கியது. அதைத் தொடர்ந்து நீட் தேர்விற்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தொடங்கியுள்ளது.
 
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்த சபரிமாலா ஜெயகாந்தன், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தனது 7 வயது மகனோடு சேர்ந்து கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வந்தார். 
 
இந்நிலையில்,  விழுப்புரம் மாவட்ட கல்வி அலுவலரை இன்று சந்தித்த சபரிமாலா தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து, அதற்கான ராஜினாமா கடிதத்தை  கொடுத்தார்.
 
நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது அரசு பணியை தூக்கி எறிந்த சபரிமாலாவை சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.