வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 16 ஜூலை 2019 (10:29 IST)

காங்கிரஸ் தான் முதலில் இந்தியை திணிக்க முயன்றது…தமிழிசை குற்றச்சாட்டு

தமிழகத்தில் முதலில் இந்தியை திணிக்க முயன்றது காங்கிரஸ் தான் என தமிழக பாஜக தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை குறித்து, பல அரசியல் தலைவர்கள் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் நடிகர் சூர்யா, மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை குறித்து கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சனம் செய்தது பெரும் சர்ச்சைக்குள்ளானது. இதை தொடர்ந்து ஹிந்தி பேசாத மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில், மத்தியில் ஆளும் பாஜக அரசு ஹிந்தி மொழியை திணிக்க முயற்சிக்கிறது என குற்றசாட்டு எழுந்துவருகிறது. இது குறித்து காங்கிரஸின் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், “தமிழகத்தில் பாஜக, ஹிந்தியை திணிக்க முயன்று வருகிறது என குற்றம் சாட்டினார்.

இந்நிலையில் தற்போது தமிழக பாஜக தலைவர், தமிழிசை சௌந்தர்ராஜன் இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தமிழகத்தில் திமுகவால் ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு நாடகங்கள் நடந்து வருகிறது என்றும், நீட் தேர்வுக்கு வீணாக எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர் எனவும் கூறியுள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில், தமிழகத்தில் ஹிந்தி எதிர்ப்பை முதலில் திணிக்க முயன்றது காங்கிரஸ் தான் எனவும், ஆதாலால் ஹிந்தி திணிப்பை பற்றி பேசுவதற்கு காங்கிரஸார்களுக்கு எந்த தகுதியும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

”தமிழகத்தில் ஹிந்தியை திணிக்க முயன்ற காங்கிரஸாருடன் தான் தற்போது திமுக கூட்டணி வைத்துள்ளது” எனவும் அந்த அறிக்கையில் திமுகவை விமர்சித்துள்ளார் தமிழிசை சௌந்தர்ராஜன்.