1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: திங்கள், 4 மே 2015 (13:34 IST)

அதிகாரியின் தொல்லை தாங்க முடியாமல் மீண்டும் ஒரு அரசு ஊழியர் தீக்குளித்து தற்கொலை

திருவாரூர் அருகே உள்ள அம்மையப்பன் உப்புகார தெருவைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (வயது 36). திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் இளநிலை வரைவாளராக (டிராப்ட்ஸ்மேன்) பணியாற்றி வந்தார்.
 

 
8 மாதங்களுக்கு முன்பு நன்னிலத்துக்கு மாற்றப் பட்டார். அங்குள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மேற்பார்வை பொறியாளராக பணியாற்றி வந்தார்.
 
நேற்று மாலை முத்துகிருஷ்ணன் உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொண்டார். தீக்காயம் அடைந்த அவரை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
 
அவரிடம் திருவாரூர் ஜூடிசியல் மாஜிஸ்ட்ரேட் கவிதா ரகசிய வாக்குமூலம் பெற்றார். உயர் அதிகாரி அதிக தொல்லை கொடுத்ததாகவும், அதனால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றதாகவும் தெரிவித்தார். இன்று காலை சிகிச்சை பலனின்றி முத்துகிருஷ்ணன் இறந்தார்.
 
முத்துகிருஷ்ணன்  மீண்டும் திருவாரூருக்கு மாறுதல் கேட்டார். ஆனால் அவருக்கு மாறுதல் கொடுக்கப்படவில்லை. செயற்பொறியாளர்  செந்தில்குமார் அவருக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாகவும், அதில் மனமுடைந்து முத்துகிருஷ்ணன் தற்கொலையில் ஈடுபட்டதாகவும் ஓவர்சியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் வினோத்குமார், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் சுந்தரலிங்கம் ஆகியோர் தெரிவித்தனர். தற்கொலை செய்து கொண்ட முத்துகிருஷ்ணனுக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனர்.
 
நெல்லையில் வேளாண் அதிகாரி முத்துகுமாரசாமி அதிகாரிகளின் தொந்தரவால் தற்கொலை செய்த சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டார்.
 
இந்த சம்பவம் அடங்குவதற்குள் மேலும் ஒரு அரசு ஊழியர் தற்கொலை செய்து கொண்டது அரசு ஊழியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.