வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : சனி, 24 ஜூன் 2017 (15:37 IST)

சுவாதி கொலை.. தமிழகத்தை உலுக்கிய ஜூன் 24ம் தேதி...

கடந்த வருடம் ஜூன் 24-ஆம் தேதி சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பட்டப்பகலில் இளம்பெண் சுவாதி கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது. 


 

 
மென்பொறியாளரான சுவாதி கொலை செய்யப்பட்டது தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தது. இந்த கொலைக்கான காரணம், அதை யார் செய்தது போன்றவை இன்று வரை மர்மமாகவே உள்ளது. ஆனால், கடந்த ஜூலை 1ம் தேதி,  இந்த கொலையை செய்தது நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞர் தான் என  போலீசார் கைது செய்தனர். 
 
ராம்குமார் கைது செய்யப்பட்ட போது அவர் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்பட்டது. அதன் பின்னர் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.


 

 
ஆனால் கடந்த செப்டம்பர் 18-ஆம் தேதி ராம்குமார் சிறையிலேயே மின்கம்பியை கடித்து தற்கொலை செய்துகொண்டார் என காவல்துறை கூறியது. அதன் பின்னர் பரபரப்பாக சென்ற இந்த வழக்கு தற்போது அமைதியாக தூங்குகிறது. 
 
அந்நிலையில் ராம்குமாரின் வழக்கறிஞர் ராம்ராஜ் மீண்டும் இந்த வழக்கு குறித்து நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசினார். ராம்குமாரின் பிரேதபரிசோதனை அறிக்கையை இன்னமும் தராமல் இழுத்தடிப்பதாக குற்றம் சாட்டிய அவர் ராம்குமாரின் பெற்றோர்கள் இது தொடர்பாக புகார் அளிக்க உள்ளதாக கூறினார். 
 
மேலும் சுவாதி கொலை வழக்கின் பின்னணியில் பல மர்மங்கள் புதைந்து கிடப்பதாகவும், அவரின் கொலையில் தீவிரவாத இயக்கங்களுக்குத் தொடர்பு இருக்கக் கூடும் என்கிற சந்தேகமும் உள்ளதாகவும் தெரிவித்தார். எனவே இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளார்.


 

 
ஒருவேளை ராம்குமார் தரப்பில் நியாயங்கள் இருந்தால், அதை அவர் வெளிப்படையாக ஊடகங்களில் தெரிவிக்க கூட போலீசார் அனுமதிக்கவில்லை. அவர் சிறையில் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பதை நிரூபிக்கும், அவரின் உடல் பரிசோதனை அறிக்கை கூட இன்னும் வெளியிடப்படவில்லை. அது ஏன் என ராம்குமாரின் வழக்கறிஞரோ, அவரின் பெற்றோர்களோ அல்லது ராம்குமாருக்கு ஆதரவாக குரல் கொடுத்த அரசியல்வாதிகளோ கூட தீவிரமாக குரல் கொடுக்கவில்லை.
 
இந்த வழக்கில் பொதுமக்கள் தரப்பிலிருந்தும், சமூக ஆர்வலர்கள் மற்றும் வழக்கறிஞர்களிடமிருந்தும் ஏராளமான கேள்விகள் எழுப்பப்பட்டன. ஆனால், எதற்கும் கடைசிவரை பதில் கிடைக்கவில்லை. 


 

 
சுவாதி படுகொலை செய்யப்பட்டு இன்றோடு ஒரு வருடம் முடிந்த நிலையிலும், அவரின் மரணம் முதல் சிறையில் ராம்குமார் மரணம் நிகழ்ந்தவரை அனைத்தும் மர்மமாக இருக்கிறது.