வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வியாழன், 13 ஏப்ரல் 2017 (09:55 IST)

விவசாயிகளுக்கு ஆதரவாக வெடித்தது போராட்டம்: கௌதமன் தலைமையில் திரண்டது மாணவர் படை!

விவசாயிகளுக்கு ஆதரவாக வெடித்தது போராட்டம்: கௌதமன் தலைமையில் திரண்டது மாணவர் படை!

தமிழக விவசாயிகள் கடந்த 31 நாட்களாக டெல்லியில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை மத்திய அரசு அவர்களது போராட்டத்துக்கு செவி சாய்க்கவில்லை. இதனால் தமிழக மக்களிடையே மத்திய, மாநில அராசுகள் மீது அதிருப்தி நிலவி வருகிறது.


 
 
வறட்சி நிவாரண நிதி, விவசாயக்கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வேண்டும் என சில கோரிக்கைகளுடன் தமிழக விவசாயிகள் தினமும் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 
ஆனால் இது தொடர்பாக மத்திய அரசு அவர்களுக்கு எந்த சாதகமான முடிவையும் அளிக்காமல் தொடர்ந்து அலட்சியப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த திங்கள் கிழமை பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்வதாக அழைத்து செல்லப்பட்ட விவசாயிகள் ஏமாற்றப்பட்டனர்.
 
இதனால் மனம் நொந்த தமிழக விவசாயிகள் தங்கள் ஆடைகளை களைந்து முழு நிர்வாணமாக போராட்டம் நடத்தினர். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் தமிழகத்தில் மத்திய அரசு மீது கடும் எதிர்ப்பு உருவாகியது. நாட்டுக்கு சோறு போடும் விவசாயிகளை நிர்வாணமாக போராடும் நிலைக்கு இந்த அரசு கொண்டு வந்துவிட்டது என பலரும் சமூக வலைதளங்களில் தங்கள் வருத்துங்களை தெரிவித்தனர்.
 
இந்நிலையில் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழக மாணவர்கள் களத்தில் குதித்துள்ளனர். இயக்குநர் கௌதமன் தலைமையில் மாணவர் படை சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தில் போக்குவரத்தை தடுத்து மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 
இந்த மாணவர் போராட்டம் ஜல்லிக்கட்டுக்காக மெரினாவில் நடந்த போராட்டத்தை விட வீரியமாக வெடிக்கும் என போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கூறினர். கத்திப்பாரா மேம்பாலத்தில் இந்த போராட்டம் நடந்து வருவருதால் வாகனங்கள் பல ஸ்தம்பித்து நிற்கின்றன. சென்னையை புறநகர் மற்றும் வெளிமாநிலங்களுடன் இணைக்கும் முக்கிய வழித்தடமான இங்கு போராட்டம் நடந்து வருவதால் கடும் போக்குவரத்து நெரிசலை இந்த போராட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.