ஸ்டாலின் பயணம் உடலுக்கு மட்டுமே நல்லது; தமிழ்நாட்டுக்கு எந்த பயனும் இல்லை - சீமான்
மு.க.ஸ்டாலின் நடை பயணம் உடலுக்கு மட்டுமே நல்லது; தமிழ்நாட்டுக்கு எந்த பயனும் இல்லை என்று நாம் தமிழர்கட்சி தலைவர் சீமான் கூறியுள்ளார்.
கடந்த 2008ஆம் ஆண்டு இலங்கை தமிழர் பிரச்சனைக்காக தமிழ் திரையுலகம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட இயக்குனர்கள் சீமான், அமீர் ஆகியோர் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கியூ பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் கோர்ட்டில் நடந்து வருகிறது. இதற்காக நாம் தமிழர்கட்சி தலைவர் சீமான் கோர்ட்டில் ஆஜரானார். பிறகு நீதிபதி சந்திரன் வழக்கை வருகிற 28ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
பிறகு நிருபர்களிடம் சீமான் கூறும்போது, ”வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவது உறுதி. திமுக மற்றும் அதிமுகவிடம் இருந்து தமிழக மக்களை காப்பாற்றுவதே எங்களின் முதல் வேலை.
தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் லஞ்சம், ஊழல், முறைகேடு அதிகரித்து விட்டது. தேசிய கட்சி தேவை இல்லை காமராஜர் ஆட்சிதான் தமிழகத்தில் ஊழல் இல்லாத காலமாக இருந்துள்ளது.
மு.க.ஸ்டாலின் ஊர் ஊராக சென்று நடந்து வருவது அவரின் உடலுக்கு மட்டுமே நல்லது. தமிழ்நாட்டுக்கு எந்த பயனும் இல்லை” என்று கூறியுள்ளார்.