1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 24 மே 2018 (11:54 IST)

எடப்பாடி சந்திக்க அனுமதி கேட்டு ஸ்டாலின் தர்ணா - தலைமை செயலகத்தில் பரபரப்பு

சென்னையில் தலைமைச் செயலகம் முன்பு திமுகவினர் சாலை மறியல் போரட்டம் நடத்துவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 
தூத்துகுடியில் நடந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நேற்று முன்தினம் போராட்டக்காரர்களை கலைக்க துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் 11 பேர் பலியாகிய நிலையில் நேற்றும் இரண்டாவது நாளாக துப்பாக்கி சூடு நடந்தது. 
 
இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 22 வயது இளைஞர் ஒருவர் பலியாகிய நிலையில் மேலும் ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி அவரும் இறந்ததால் கடந்த இரண்டு நாட்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது. இது தமிழகத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில், இது தொடர்பாக முதல்வரிடம் விவாதிக்க திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், துரை முருகன் உள்ளிட்ட சிலர் இன்று காலை தலைமை செயலகம் வந்தனர். ஆனால், அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. எனவே, ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட சில திமுக எம்.எல்.ஏக்கள் முதல்வர் அறையின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல், தலைமை செயலகம் முன்பு திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் ஸ்டாலின் வெளியே வந்து  சட்டமன்ற வளாகத்தில் அவரும் போராட்டத்தில் ஈடுபட்டார். 
 
தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூட்டில் மக்கள் இறந்து போனதற்கு எடப்பாடி பழனிச்சாமியே காரணம் எனக்கூறி திமுகவினர் கோஷம் எழுப்பி வருகின்றனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.