வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: திங்கள், 24 அக்டோபர் 2016 (11:52 IST)

வைகோ, திருமா இடையே புகைச்சல்: ம.ந.கூட்டணியில் பிளவு?

வைகோ, திருமா இடையே புகைச்சல்: ம.ந.கூட்டணியில் பிளவு?

திமுக கூட்ட இருக்கும் அனைத்து கட்சி கூட்டம் குறித்து கருத்து தெரிவித்த வைகோ மற்றும் திருமாவளவன் இடையே கருத்து வேறுபாடு இருப்பது ஊடக வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதனால் மக்கள் நல கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக பேசப்படுகிறது.


 
 
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசை வலியுறுத்த நாளை அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட திமுக சார்பில் அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
 
திமுக கூட்ட உள்ள இந்த கூட்டத்திற்கு மக்கள் நல கூட்டணியில் உள்ள கட்சிகள் பங்கேற்காது என மக்கள் நல கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ தெரிவித்தார். மேலும் திமுக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவது ஏமாற்று வேலை. இது ஒரு நாடகம் எனவும் அவர் கூறினார்.
 
இந்நிலையில் மக்கள் நல கூட்டணியில் உள்ள விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறிய போது, காவிரி பிரச்சனை பொதுப்பிரச்சனை என்பதால் அனைத்துக் கட்சி கூட்டத்தை யார் கூட்டினாலும் பங்கேற்கலாம் என்ற கருத்தை மக்கள் நல கூட்டணியில் முன்வைத்தேன். ஆனால் கூட்டணியில் உள்ள பெரும்பான்மையின் அடிப்படையில் கூட்டத்தில் பங்கேற்பதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
 
இதனையடுத்து அனைத்துக்கட்சி கூட்டத்தில் கலந்து கொள்வது பற்றி கட்சி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து எங்கள் முடிவை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம் என திருமாவளவன் கூறினார்.
 
வைகோ மற்றும் திருமாவளவனின் மாறுபட்ட கருத்தால் அந்த கூட்டணியில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விசிக இந்த கூட்டத்திற்கு வந்தால் வரவேற்போம் என திமுக அழைப்பு விடுத்துள்ளது.