வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 30 ஏப்ரல் 2016 (14:05 IST)

’அண்ணி பிரேமலதா கரைசேராத கட்டுமரத்தில் தேமுதிகவை கட்டிவிட்டார்’ - சந்திரகுமார் தாக்கு

தேமுதிக கட்சியை மக்கள் நலக் கூட்டணி என்ற கரைசேராத கட்டுமரத்தில் கட்டிவிட்டார் அண்ணி பிரேமலதா என்று தேமுதிகவில் இருந்து திமுகவில் இணைந்துள்ள வி.சி.சந்திரகுமார் கூறியுள்ளார்.
 

 
இது குறித்து கூறியுள்ள சந்திரகுமார், "தேமுதிக என்பது கேப்டன் விஜயகாந்த் ரசிகர்களால் உருவாக்கப்பட்ட கட்சி. கட்சியில் கேப்டனின் மனைவியான அண்ணியார் தலையீடு வந்ததில் இருந்தே, கேப்டன் கட்டுப்பாட்டில் இருந்து கட்சி சென்றுவிட்டது.
 
சுயநல நோக்கோடு லட்சக்கணக்கான தொண்டர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக வைகோவின் பேச்சை நம்பி கட்சியை அடகு வைத்தவர்தான் அண்ணி பிரேமலதா. தொண்டர்களின் அனைவரின் கருத்து திமுகவோடு கூட்டணி அமைக்க வேண்டும் என்பதுதான்.
 
ஆனால் சுய லாபத்துக்காக கட்சியின் எதிர்காலத்தை கருத்தில் கொள்ளாமல் பல்வேறு தரப்பட்ட நபர்களிடம் நடந்த ரகசிய சந்திப்பின் பின்னணியில் பெரும் பலனடைந்த பிறகு கட்சியை மக்கள் நலக் கூட்டணி என்ற கரைசேராத கட்டுமரத்தில் கட்டிவிட்டார் அண்ணி பிரேமலதா.
 
30 ஆண்டு காலமாக கேப்டன் ரசிகராக கட்சியின் நிர்வாகிகளாக தொண்டர்களாக உழைத்தவர்களுக்கு பட்டை நாமம் போட்டுவிட்டு பலன் பெற்றது யார். அப்படி பலன் பெற்றவர்கள்தான் துரோகிகள். கட்சியை வைகோவிடம் அடகு வைத்தவர்கள்தான் துரோகிகள். உழைத்த தொண்டர்களை தெருவில் நிறுத்தியவர்கள்தான் முதுகில் குத்தியவர்கள்.
 
இப்போதும் நான் தேமுதிகவின் லட்சக்கணக்கான தொண்டர்களுக்கு மதிப்பளித்துதான் திமுகவுடன் கூட்டணி சேர்ந்துள்ளேன். பெட்டி பெட்டியாக பணம் வாங்கியதும், கொள்ளையடித்ததும், கொள்ளை களவானிகளோடு ரகசிய கூட்டு வைத்திருப்பதும் அவர்களது மனசாட்சிக்கு தெரியும்" என்று கூறியுள்ளார்.