1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 9 அக்டோபர் 2018 (16:58 IST)

நீயும் நல்லா இருக்க....தனியா வா – பாலியல் புகாரில் ராதாரவி

கவிஞர் வைரமுத்துவை அடுத்து தற்போது நடிகர் ராதாரவியின் மீதும் ஒரு பெண் பத்திரிக்கையாளர் பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.


பாலியல் தொல்லை குறித்தும், பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் குறித்தும் சின்மயி தொடர்ந்து தனது டிவிட்டர் பக்கத்தில் பேசி வருகிறார்.  தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியவர்கள் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் தொடர்ந்து பேசி வருகிறார். இதில் அவர் சிறு வயதில் தனது உறவினர்களால் அனுபவித்த பாலியல் தொந்தரவுகள் குறித்தும் வெளிப்படையாக பேசி வருகிறார்.

இதனால் நம்பிக்கைப் பெற்ற பெண்கள் தாங்கள் அனுபவித்த பாலியல் தொந்தரவுகள் குறித்து அவரிடம் பகிர்ந்து கொண்டு வருகின்றனர். அவர்களின் அனுமதியோடு அவற்றையும் தனது டிவிட்டரில் சின்மயி பகிர்ந்து வருகிறார். இந்த வரிசையில் நேற்று மாலை அதிர்ச்சியளிக்கும் விதமாக ஒரு பெண் பத்திரிக்கையாளர் கவிஞர் வைரமுத்துத் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறியிருந்ததை தனது பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்த விஷயம் தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் சர்ச்சைகளைக் கிளப்பி வருகிறது.

இந்த வரிசையில் நடிகர் ராதாரவி மீது இணையதள பத்திரிக்கையாளர் காவ்யா நக்‌ஷத்ரா என்பவர் தனது டிவிட்டரில் பாலியல் புகார் அளித்துள்ளார். அந்த டிவிட்டில் ‘வைரமுத்து தொடர்பான சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. அதே மாதிரி ஒரு நிகழ்வு எனக்கும் நடிகர் ராதாரவியோடு ஏற்பட்டது. ஒரு வேலை சம்மந்தமாக அவரை அவரது அலுவலகத்தில் சந்திக்க சென்ற போது அவர் என்னை கட்டிபிடித்து முத்தம் கொடுத்தார். வேலையை நல்லபடியாக செய்து முடி. நாம் பிறகு சந்திப்போம். நீயும் நல்லாத்தான் இருக்க ஃபிரண்ட்ஸோடு வராத தனியா வா’. என்றார். அந்த வேலையை அதோடு நிறுத்தி விட்டேன். வைரமுத்துவைப் போல ராதாரவியும் அரசியல் வட்டாரத்தில் வலிமையானவர். சமூக வலைதளங்களில் அவர்களை வெளிப்படுத்துவதில் ஒன்றும் நடந்து விடப்போவதில்லை’ என தெரிவித்துள்ளார்.

இந்த டீவிட்டில் பாடகி சின்மயி மற்றும் நடிகை வரலட்சுமி இருவரையும் அவர் டேக் செய்துள்ளார். சின்மயி ஆரம்பித்து வைத்துள்ள இந்த பாலியல் புகார் விவகாரம் கொஞ்சம் கொஞ்சமாக இந்தியன் மீடூ(metoo) வாக மாறிக் கொண்டு வருகிறது.