1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வியாழன், 21 செப்டம்பர் 2017 (16:25 IST)

கைதாகிறார் செந்தில் பாலாஜி? குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க திட்டம்?

கைதாகிறார் செந்தில் பாலாஜி? குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க திட்டம்?

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆளும் தரப்பினால் கட்டம் கட்டப்படுவதாக தகவல்கள் வருகின்றன. அவர் மீதான பழைய புகார்களை தமிழக காவல்துறை தூசி தட்ட ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் செந்தில் பாலாஜி விரைவில் கைதாக இருக்கிறார் எனவும், குண்டர் சட்டம் பாய இருக்கிறது எனவும் தகவல்கள் வருகின்றன.


 
 
எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக இருந்த தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தீவிரமாக செயல்பட்டு வலம் வந்தார். இந்நிலையில் அவர்களின் ஆட்டத்தை அடக்க ஆளும் தரப்பு திட்டமிட்டுள்ளது. இதனால் வழக்குகள் போட்டு சிறையில் அடைக்கும் ஆயுதத்தை கையிலெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
 
செந்தில் பாலாஜி கடந்த ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது, போக்குவரத்துக் கழகத்தில் பணி நியமன ஆணை தருவதாகக் கூறி 6 கோடி ரூபாய்க்கு மேல் பணம் வசூலித்ததாக இவர்மீது புகார்கள் எழுந்தன. இந்நிலையில் தற்போது செந்தில் பாலாஜியின் ஆட்டத்தை அடக்க அவர் மீதான மோசடி புகார்களை கையிலெடுக்க ஆரம்பித்துள்ளனர்.
 
இது தற்போது விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்துள்ளது. செந்தில் பாலாஜியின் உறவினர்கள் வீடு உட்பட அவர் தொடர்புள்ள அனைத்து இடத்திலும் வருமான வரித்துறையினர் போனதாக கூறப்படுகிறது. தற்போது செந்தில் பாலாஜி மீது 408, 420 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
 
இந்த பிரிவுகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி குண்டர் சட்டத்திலும் செந்தில் பாலாஜியை கைது செய்து ஒரு வருடம் சிறையில் அடைக்க திட்டம் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.