வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: திங்கள், 25 ஆகஸ்ட் 2014 (10:27 IST)

காதலி முகத்தில் ஆசிட் வீசிய வாலிபர்

சீர்காழி அருகே காதலித்தப் பெண்ணை வேறொருவருக்குத் திருமணம் செய்து வைக்க முயன்றதால் ஆத்திரம் அடைந்த காதலன் காதலித்தப் பெண்ணின் முகத்தில் ஆசிட்டை வீசியுள்ளார்.

நாகை மாவட்டம் சீர்காழி அருகே தாடாளன் காமராஜபுரம் தெற்கு தெருவில் வசிப்பவர் வீரமணி. கொத்தனார். இவரது மகள் 20 வயதுடைய சுபா. இவர் பிளஸ் 2 படித்துவிட்டு சீர்காழியில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருகிறார்.

சுபாவும் சீர்காழியை அடுத்து பனமங்கலம் வடக்கு தெருவில் வசிக்கும் பெருமாள் மகன் 27 வயதுடைய தங்கபாண்டியனும். கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

தங்கபாண்டியன் சென்னையில் உள்ள டிராவல்ஸ் கம்பெனியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் சுபா தன்னிடம் செல்போனில் பேசுவதை தவிர்த்து வந்ததால் தங்கபாண்டியன் தனது நண்பர்கள் மூலம் விசாரித்தார். அப்போது சுபாவை உறவினருக்கு திருமணம் செய்து கொடுக்க ஏற்பாடு நடந்திருப்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து தங்கபாண்டியன் தனது உறவினர்களுடன் கடந்த 15 ஆம் தேதி சுபா வீட்டிற்கு சென்று பெண்கேட்டார். அதற்கு சுபாவின் பெற்றோர் சம்மதிக்கவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த தங்கபாண்டியன் தனக்கு கிடைக்காத சுபா வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என்று முடிவு செய்து ஆசிட்டுடன் சுபாவின் வீட்டிற்குச் சென்று பின்புறத்தில் மறைந்திருந்தார்.

அப்போது அங்கு வந்த சுபாவின் முகத்தில் ஆசிட்டை ஊற்றி விட்டு ஓடி விட்டார். வலியால் துடித்த சுபாவை சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து சீர்காழி காவல்துறையினருக்குப் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தங்கபாண்டியனை கைது செய்தனர்.