வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வியாழன், 27 நவம்பர் 2014 (15:25 IST)

மக்களுக்காகப் போராடிய நல்லகண்ணு, நெடுமாறனுக்கு இல்லாத தகுதியா ரஜினிக்கு உள்ளது? - சீமான் ஆவேசம்

வாழ்நாள் முழுவதும் மக்களுக்காகப் போராடிய நல்லகண்ணு, நெடுமாறனுக்கு இல்லாத தகுதியா ரஜினிக்கு உள்ளது என்று சீமான் கேள்வியெழுப்பி உள்ளார்.
 

 
தமிழர் தலைவர் பிரபாகரன் பிறந்த நாளையொட்டி, 'வரலாற்று தலைவனுக்கு வாழ்த்துப்பா' என்ற நூல் வெளியீட்டு விழாவும், 'தாய்புலிக்கு புகழ்பரணி, ‘தலைமகனுக்கு தாலாட்டு' ஆகிய 2 குறுந்தகடுகள் வெளியீட்டு விழாவும் நடைபெற்றது.
 
இதில் கலந்து கொண்டு பேசிய சீமான், 'ஈழத்தமிழர்களை அழித்து விட்டு சிங்கள இனவாதத்தை முன்நிறுத்தும் நோக்கத்துடன் இலங்கை அரசாங்கம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழர்கள் மீது ஏவி விடப்பட்ட சிங்கள பயங்கரவாதத்தை எதிர்த்து நின்று உயிர் தியாகம் செய்த மாவீரர்களை நாம் நினைவு கூர்ந்து கொண்டிருக்கிறோம்.
 
விடுதலைப்புலிகள் இயக்கத்தை பயங்கரவாத இயக்கம் என்று கூறித் தடை செய்துள்ளனர். முடக்கிப் போடுவதற்கும், மடக்கி வைப்பதற்கும் நாங்கள் குடைகள் அல்ல. புலிப்படையைப் பார்த்து வளர்ந்தது நாம் தமிழர் படை.
 
ஆள்கிற கட்சி, ஆண்ட கட்சி இரண்டுமே நம் விடுதலைக்கு எதிராக இருக்கும் போது, இவர்களுக்கு எதிராக மக்களை திரட்டி நாம் வலுவாக வேண்டும். படையைப் பெருக்கி மக்களைத் திரட்டி, அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும்.
 
பிரபாகரனுக்கு இங்கே ஏன் விழா கொண்டாடுகிறீர்கள், பிரபாகரனை எதற்காக இங்கு தலைவர் என்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். எனக்கு சம்பந்தமே இல்லாத பலர் இந்த மண்ணில் சிலருக்கு தலைவராகும் போது, தமிழின விடுதலைக்காக போராடிய பிரபாகரன் தலைவராகக் கூடாதா?
 
முதலமைச்சர் பதவியைப் பிடிப்பதற்காகவா கட்சி ஆரம்பித்து உள்ளீர்கள் என்று சிலர் கேட்கிறார்கள். பிறகு முச்சந்தியில் கத்தி கிட்டு சாகவா கட்சி ஆரம்பித்திருக்கிறோம். ஆமாம் அதிகாரத்தை கைப்பற்றத்தான் கட்சி ஆரம்பித்திருக்கிறோம்.
 
உணர்வுள்ள தமிழர்கள் அதிகாரத்தை கைப்பற்றுவதுதான் ஒரே மாற்று. நாங்கள் ஆட்சியை பிடிக்க சில ஆண்டுகள் கூட ஆகலாம். ஆனால் நிச்சயம் கைப்பற்றுவோம். அதுவரை காத்திருக்கிற பொறுமையும், தோல்வி ஏற்பட்டாலும் தொடர்ந்து மக்களுக்காக போராடுகிற தைரியமும் எங்களுக்கு உண்டு.
 
ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று பலரும் அழைக்கிறார்கள். வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக போராடிய நல்லகண்ணு, நெடுமாறனுக்கு இல்லாத தகுதியா ரஜினிக்கு உள்ளது?
 

 
தமிழ் மண்ணிற்காக, மொழிக்காக, இயற்கையை காப்பதற்காக, இந்த மக்களுக்காக தன் ஆயுளையே அற்பணித்த பலர் இந்த மண்ணில் இருக்கும் போது, ரஜினியை முன்னிறுத்துகிறார்கள். அதற்கும் ஆதரவு கொடுக்கவும் சிலர் இந்த மண்ணில் இருக்கிறார்கள் என்றால், இந்தத் தமிழ்ச் சமூகம் எதை நோக்கிப் போகின்றது.
 
மக்களுக்காக எதாவது ஒரு விஷயத்தில் ரஜினி உறுதியாக நின்றிருக்கிறாரா? வரட்டும் பார்க்கலாம். தனியாக வந்தாலும் சரி, யாரோடும் கூட்டணி வைத்து வந்தாலும் சரி. தேர்தல் வரட்டும். போட்டுப் பார்த்து விடலாம், பிரபாகரனின் தம்பிகளா? ரஜினி ரசிகர்களா? என்று"  என்றார்.