1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: ஞாயிறு, 16 ஏப்ரல் 2017 (12:51 IST)

மகாதேவன் உடல் தகனம் ; பரோலில் வர விரும்பாத சசிகலா

சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவனின் உடல் இன்று தகனம் செய்யப்பட்டது. இதில் கலந்துகொள்ள சசிகலா பரோலில் வெளிவர மறுத்து விட்டதாக தெரிகிறது.


 

 
சசிகலாவின் இரண்டாவது அண்ணன் வினோதனின் மூத்த மகன் மகாதேவன் நேற்று காலை திருவிடைமருதூர் கோவிலுக்கு சென்றபோது மாரடைப்பு காரணமாக திடீரென மரணமடைந்தார். 42 வயதான இவரது மரணம் மன்னார்குடி குடும்பத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பிடப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பரோலில் வெளிவர வாய்ப்புள்ளதாக அதிமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. ஏற்கனவே சசிகலாவின் உடல்நிலையை காரணம் காட்டி அவரை பரோலில் வெளியே கொண்டுவர வழக்கறிஞர்களுடன் ஆலோசித்ததாக தகவல்கள் வந்தது. இந்நிலையில் மகாதேவனின் இந்த திடீர் மரணத்தால் சசிகலா எளிதாக பரோலில் வெளிவர வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. 
 
மேலும், சசிகலா பரோலில் வெளியே வர விரும்பினால் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என டிடிவி தினகரனும் கருத்து தெரிவித்தார். 
 
ஆனால், பரோலில் வெளிவர சசிகலாவிற்கு விருப்பமில்லை என அதிமுக அம்மா கட்சியின் கார்நாடக மாநில தலைவர் புகழேந்தி நேற்று தெரிவித்தார். இந்நிலையில் மகாதேவனின் உடல் இன்று காலை தகனம் செய்யப்பட்டது. புகழேந்தி கூறியது போலவே, சசிகலா இதில் கலந்து கொள்ளவில்லை.