செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : ஞாயிறு, 9 ஆகஸ்ட் 2015 (13:06 IST)

மாறுபட்ட கருத்துகளை தெரிவிப்பதுதான் ஜனநாயகம் என்பதை நான் நன்றாக அறிவேன் - வைகோ

மாறுபட்ட கருத்துகளை தெரிவிப்பதுதான் ஜனநாயகம் என்பதை நான் நன்றாக அறிவேன் என்றும் தனது பேச்சால் நல்லசாமியின் மனதை காயப்படுத்தியதற்காக வருந்தம் தெரிவிப்பதாகவும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். 
 
இது குறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
 
சசி பெருமாளின் நல்லடக்க நிகழ்ச்சியில் அவரின் லட்சியத்தை நிறைவேற்ற தமிழகத்தில் முற்றாக மதுவை ஒழிக்க வேண்டும் என்பதே நமது இலக்கு என அனைவரும் உரையாற்றினர்.
 
அப்போது நல்லசாமி மேடைக்கு வந்தார். நல்லசாமி மீது நான் மிகுந்த மரியாதை கொண்டவன். முற்றாகவே மதுக்கடைகளை ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கும்போது, கள்ளுக்கு அனுமதி என்பதை ஏற்க இயலாது.
 
சசி பெருமாளின் இரங்கல் மேடையில் முரண்பட்ட கருத்துகள் முன்வைக்கப்பட்டால், இரங்கல் கூட்டத்தில் மோதல் என்றுதான் செய்தி வெளியாகும்.
 
அந்த தியாகியினுடைய நல்லடக்க நிகழ்ச்சியின்போது அப்படி ஒரு செய்தி பரவுவது எண்ணற்ற மக்களின் மனதைக் காயப்படுத்தும் என்பதால்தான் இந்த இரங்கல் மேடையில் முற்றாக மது ஒழிப்பு என்ற கருத்தே அழுத்தமாகச் சொல்லப்பட்டு உள்ளது.
 
அதற்கு மாறாக கள் வேண்டும் என்ற கருத்தை இங்கே பதிவு செய்து விட வேண்டாம் என்ற நோக்கத்தில் தான் நான் கூறினேன்.
 
மாறுபட்ட கருத்துகளை தெரிவிப்பதுதான் ஜனநாயகம் என்பதை நான் நன்றாக அறிவேன். ஒரு புனிதமான நிகழ்ச்சியில் கருத்து மோதல் ஏற்படக் கூடாது என்பதனால்தான் நான் அவ்வாறு பேச நேர்ந்தது.
 
அதே நேரத்தில் கள்ளைவிட, பிராந்தி, ஒயின் மேலென்று எவருமே கூறமாட்டார்கள். நல்லசாமி மனம் புண்பட்டிருப்பதை உணர்கிறேன். என் பேச்சு அவர் மனதை காயப்படுத்தியதற்காக வருந்துகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் வைகோ  கூறியுள்ளார்.