1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : திங்கள், 4 ஏப்ரல் 2016 (16:37 IST)

ஜெயலலிதாவை சிரிக்க வைத்த சந்திர பிரபாவுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு!

அதிமுக வேட்பாளர் நேர்கணலின் போது அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த சந்திர பிரபாவுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்துள்ளார் ஜெயலலிதா.


 
 
வரும் மே மாதம் 16-ஆம் தேதி நடைபெற இருக்கும் தமிழக சட்டசபை தேர்தலுக்கு அதிமுக வேட்பாளர்களை தேர்வு செய்யும் நேர்காணல் போயஸ் கார்டனில் ஜெயலலிதா முன்னிலையில் நடைபெற்றது. 
 
ஸ்ரீவில்லிப்புத்தூர் சட்டசபை தொகுதியில் இருந்து மாவட்ட கவுன்சிலர் முத்தையாவின் மனைவி சந்திர பிரபா தமிழில் முதுநிலைப்படிப்பில் ஆராய்ச்சி பட்டம் பெற்றவர். இவர் நேர்காணலுக்காக போயஸ் கார்டனுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
 
போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையத்திற்குள் நுழைந்த சந்திர பிரபா, நேர்காணல் நடந்த அறைக்குள் ஜெயலலிதாவை பார்த்ததும் காலில் நெடுஞ்சான் கிடையாக விழுந்து பின்னர் குனிந்து கொண்டே ஒரு ஓரமாக நின்றுள்ளார்.
 
சந்திர பிரபா நின்று கொண்டிருந்ததை பார்த்த ஜெயலலிதா அவரை இருக்கையில் அமர சொல்லியிருக்கிறார். ஆனால் சந்திர பிரபா ‘இல்லம்மா’ எனறு நின்று கொண்டிருந்தார். திடீரென மேடையில் பேசுவதை போல் “தங்கத்தாரகை, புரட்சித்தலைவி, தமிழகத்தை காக்க வந்த காவல் தெய்வம்” என பேச ஆரம்பித்து விட்டார் அவர்.
 
மனப்பாடம் செய்தது போல் சந்திர பிரபா கூறியதை கேட்ட ஜெயலலிதா விழுந்து விழுந்து சிரித்தாராம். பின்னர் ஜெயலலிதாவே போதும்மா, போதும் இது பொதுக்கூட்ட மேடையில்லை, முதல்ல உட்காருங்க என்று சொன்ன பிறகு தான் இருக்கையில் அமர்ந்தாராம் சந்திர பிரபா.
 
பின்னர் என்ன படிச்சிருக்கீங்க என்று ஜெயலலிதா கேட்டுள்ளார், தமிழில் ஆராய்ச்சி பட்டம் என்று சந்திர பிரபா கூறியிருக்கிறார். பின்னர் மீண்டும் வாய் விட்டு சிரித்து சந்திர பிரபாவை அனுப்பி வைத்துள்ளார் ஜெயலலிதா.
 
இந்நிலையில் இன்று வெளியான அதிமுக வேட்பாளர் பட்டியலில் சந்திர பிரபாவுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்துள்ளார் ஜெயலலிதா. அவர் ஸ்ரீவில்லிப்புத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடுகிறார்.