1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 9 அக்டோபர் 2020 (10:14 IST)

இன்று ஒருநாள் சலூன் கடை மூடல் – பாதிக்கப்பட்ட குழந்தைக்காக அடையாளப் போராட்டம்!

தமிழகம் முழுவதும் இன்று ஒருநாள் முடிதிருத்தும் கடைகள் மூடப்படுகின்றன.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவரை கிருபானந்தன் என்ற வாலிபர் பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த வழக்கில் போதிய ஆதாரம் இல்லை எனக் கூறி நீதிமன்றம் அவனை விடுதலை செய்துள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு நீதிக் கிடைக்கும் விதமாக இன்று ஒருநாள் தமிழகம் முழுவதும் உள்ள முடிதிருத்தும் கடைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இது சம்மந்தமாக சில நாட்களுக்கு முன்னர் முடிதிருத்துபவர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கை:

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வடம் குரும்பட்டியில் கடந்த ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி செவ்வாய்க்கிழமை, முடிதிருத்தும் கடை நடத்தும் வெங்கடாசலம், லட்சுமி தம்பதியரின் மகள் கலைவாணி (வயது 12) என்கிற சிறுமியின் தாய் தந்தை வெளியே சென்றிருந்தபோது எதிர் வீட்டில் வசிக்கும் கிருபானந்தன் என்பவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மயக்கமடைந்த சிறுமியை மின்சார வயரை மூக்கிலும் வாயிலும் செலுத்தி மின்சாரம் பாய்ச்சி படுகொலை செய்து உள்ளார்.

இதைக் கொலையாளியே காவல்துறையில் ஒப்புக்கொண்டுள்ளான். வடமதுரைகாவல்துறையினர் கொலை வழக்குப் பதிவு செய்து கிருபானந்தனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது. இவ்வழக்கின் தீர்ப்பு கடந்த செப். 29, 2020-ல் வெளிவந்தது, சாட்சிகள் கலைக்கப்பட்டு கிருபானந்தன் குற்றவாளி என்பதற்கு போதிய ஆதாரம் இல்லை என்று கூறி விடுதலை செய்யப்பட்டான்.

சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிவிடாமல் கொலையாளிக்குத் தூக்குத் தண்டனையோ, ஆயுள் தண்டனையோ கிடைக்கின்ற வகையில் தண்டிக்கப்பட வேண்டும். சிறுமியின் கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கோரி தமிழகம் முழு வதுமுள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் உள்ள சலூன் கடைகள் (முடிதிருத்தும் நிலையங்கள்) வரும் அக்.9ம் தேதி கடையடைப்பு செய்யப்பட உள்ளது. எங்கள் குழந்தைக்கு நீதி கேட்பதற்காக இந்தக் கடையடைப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது