1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 9 செப்டம்பர் 2020 (17:02 IST)

எஸ் வி சேகர் வருத்தத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் ... கைது செய்ய தடை!

தேசியக் கொடி அவமதிப்பு வழக்கில் எஸ் வி சேகர் வருத்தம் தெரிவித்ததை அடுத்து அவரைக் கைது செய்ய நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

பாஜக பிரமுகரும் நடிகருமான எஸ்.வி.சேகர் தமிழக அரசு மீது பல்வேறு அர்த்தமற்ற குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் தலைவர்கள் சிலைக்கு காவி துண்டு அணிவித்தது போன்ற செயல்களில் முதல்வர் கண்டம் தெரிவித்திருந்தார். இந்த சம்பவங்களை குறிப்பிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள எஸ்.வி.சேகர் தேசிய கொடி குறித்த தவறான தகவல்களை பேசியுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது.

தேசிய கொடியில் உள்ள காவி நிறம் சுதந்திரத்திற்காக மக்கள் சிந்திய குருதியை நினைவுப்படுத்தும் பொருட்டு உள்ளதாக பாடங்களில் உள்ள நிலையில் அதை மதத்தோடு தொடர்புப்படுத்தி பேசியுள்ள எஸ்வி சேகர் ’தேசிய கொடியில் உள்ள காவி நிறத்தை நீக்கிவிட்டு முதல்வர் கொடி ஏற்றுவாரா என கேள்வி எழுப்பியதாகவும், இது உள்நோக்கத்துடன் மத துவேஷத்தை உண்டாக்கும் வகையில் தேசிய கொடியை பற்றிய தகவல்களை திரித்து கூறியுள்ளதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இந்நிலையில் தன்னை கைது செய்யாமல் இருக்க வேண்டும் என்பதற்காக எஸ் வி சேகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனுத்தாக்கல் செய்தார். மேலும் அந்த மனுவில் தான் இனி எப்போதும் தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் பேசமாட்டேன் என்றும் முதல்வர் குறித்து பேசியதற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில் அந்த வழக்கு குறித்த விசாரணை இன்று மீண்டும் வந்தபோது நீதிபதிகள் எஸ் வி சேகரின் வருத்தத்தை உத்தரவாத மனுவாக ஏற்றுக் கொள்வதாக அறிவித்தனர். வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை 14ம் தேதிக்கு ஒத்திவைத்து அதுவரை எஸ்.வி சேகரை கைது செய்ய இடைக்கால தடையை நீட்டித்துள்ளனர்.