திங்கள், 30 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Dinesh
Last Modified: வெள்ளி, 15 ஜூலை 2016 (00:02 IST)

தொழில் அதிபர் வீட்டில் ரூ.2 கோடி நகை கொள்ளை: கார் டிரைவர் கைது

சேத்துப்பட்டு தொழில் அதிபர் வீட்டில் ரூ.2 கோடி நகை கொள்ளையடித்த கார் டிரைவரை காவல்துறையினர் கைது செய்தனர்.


 
சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் வசிப்பவர் தொழில் அதிபர் கோவிந்தாச்சாரி. இவர் மனைவியுன் அமெரிக்காவுக்கு சென்று விட்டனர். சென்னையில் வேறொரு இடத்தில் வசித்துவரும் இவர்களது மகள் கிரிஜா, அடிக்கடி ஹாரிங்டன் வீட்டுக்கு வந்து பார்த்துச் செல்வார். 16-ந்தேதி இவர் வீட்டுக்கு வந்த போது, பீரோவில் இருந்த ரூ.2 கோடி மதிப்புள்ள தங்கம்-வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இது குறித்து காவல்துறையில் புகார் கொடுத்தனர். வீட்டில் இருந்த சி.சி.டி.வி. கேமராவில் கொள்ளையர்கள் 3 பேர் முகமூடி அணிந்திருப்பது தெரிய வந்தது.

வீட்டில் பதிவான கைரேகையை பதிவு செய்து வீட்டில் இதற்கு முன் வேலை பார்த்தவர்களின் விவரங்களையும் சேகரித்து காவல்துறையினர் விசாரித்தனர். அப்போது அங்கு கார் டிரைவராக வேலை பார்த்து பின்னர் நின்று விட்ட சிவராஜ் என்பவனுக்கு இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, அந்தியூரில் பதுங்கி இருந்த அவனை கூட்டாளி ஏகாம்பரத்துடன் காவல்துறையினர் கைது செய்தனர். கொள்ளையடித்த ரூ. 2 கோடி மதிப்புள்ள தங்க-வைர நகைகள் மற்றும் பொருட்கள் ஏகாம்பரத்துக்கு சொந்தமான வேனின் சீட்டுக்கு அடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. காவல்துறையினர் அவைகளை பறிமுதல் செய்தனர். மேலும், இந்த கொள்ளையில் தொடர்புடைய ஒரு கொள்ளையனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.