1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : சனி, 22 நவம்பர் 2014 (19:43 IST)

கொள்ளையடித்த பணக்கட்டுகள் மீது படுத்து உறங்கிய வாலிபர் கைது

தான் கொள்ளையடித்த பணக்கட்டுகளின் மீது படுத்து உறங்கிய  வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
 
சென்னையில் உள்ள ஜெ.ஜெ.நகரில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்த 2 இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் போல் வேடமிட்டு பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கம் பகுதியில் பதுங்கி இருப்பதாக அண்ணாநகர் காவல்துறை துணை ஆணையர் மனோகரனுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
 
அதன் பேரில் நேற்று காவல்துறை தனிப்படையினர், மாறுவேடத்தில் காட்டுப்பாக்கத்தில் உள்ள ஒரு விடுதியில் விசாரணை நடத்தியுள்ளனர்.
 
அப்போது அந்த விடுதியிலுள்ள ஓர் அறையில் பணக்கட்டுகளின் மேல் வாலிபர் ஒருவர் உறங்கி கிடந்துள்ளார். அவரிடம் தொடர் விசாரணை நடத்தியதில் அவர், கொடுங்கையூரை சேர்ந்தவர் என்பதும், அவர் தனது கூட்டாளியுடன் சேர்ந்து சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் தொடர் கொள்ளை, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்துள்ளது.
 
கைதானவர்கள் மீது 25க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. மேலும் அவர்களிடமிருந்து 40 பவுன் நகைகள் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றையும் கைப்பற்றியுள்ளனர். 
 
மேலும் இவர்கள், தாங்கள் கொள்ளையடித்த பணத்தில், இளம்பெண்களை தங்களது வலையில் விழவைத்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளனர்.