1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : செவ்வாய், 1 செப்டம்பர் 2015 (09:05 IST)

இட ஒதுக்கீட்டு முறையே கூடாது என்னும் கருத்தை வலுப்பெறச் செய்வதே அமித்ஷாவின் நோக்கம்: திருமாவளவன்

இட ஒதுக்கீட்டு முறையே கூடாது என்னும் கருத்தை வலுப்பெறச் செய்வதே பாஜக தலைவர் அமித்ஷா போன்றவர்களின் நோக்கம் என்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம் சாற்றியுள்ளார்.
 
இது குறித்து திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
குஜராத்தில் இட ஒதுக்கீட்டிற்கான போராட்டம் வெடித்துள்ளது, ஒட்டுமொத்த இந்தியாவையும் தன்னை நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இடஒதுக்கீட்டிற்கு எதிரான சிந்தனை உள்ளவர்கள் இன்று மத்தியில் ஆட்சியில் இருப்பதால் இத்தகைய போராட்டங்களை ஊக்கப்படுத்தும் வகையில் செயல்படுவதையும் காண முடிகிறது.
 
பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அமித்ஷா தமிழகத்திற்கு வந்து, விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை தங்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டாம் எனப் பேச வைக்கிறார்.
 
அவர் சொந்த மாநிலமான குஜராத்தில் வைர வியாபாரிகளான தங்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டும், இல்லையேல் இட ஒதுக்கீட்டு முறையே வேண்டாம் என படேல் சமூகத்தினர் பேசுவதை வேடிக்கைப் பார்க்கிறார்.
 
மொத்தத்தில், இடஒதுக்கீட்டு முறையே கூடாது என்னும் கருத்தை வலுப்பெறச் செய்வதே அமித்ஷா போன்றவர்களின் நோக்கம் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.
 
இத்தகைய ஒரு சூழலில் இட ஒதுக்கீட்டு முறையைப் பாதுகாப்பதற்கு சமூக நீதிச் சிந்தனையாளர்கள் ஒருங்கிணைந்து போராட முன்வர வேண்டும்.
 
அகில இந்திய அளவில் அணிதிரள வேண்டியதும் இன்றைய வரலாற்றுத்தேவை என்பதை விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சுட்டிக்காட்டுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் திருமாவளவன் கூறியுள்ளார்.