1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 20 ஜூன் 2018 (18:04 IST)

அடிப்படை வசதிகள் இல்லாத அகதிகள் முகாம் ! அந்தரத்தில் தொங்கும் வீடுகள்

உலக அகதி நாள் (World Refugee Day), ஆண்டுதோறும் ஜூன் 20-ம் நாளன்று நினைவுகூறப்பட்டு வருகின்றது. 2000 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் சிறப்புத் தீர்மானமொன்றின்படி, அகதிகளுக்கான தமது ஆதரவினை வெளிப்படுத்தும் முகமாக, உலக அகதிகள் தினமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆபிரிக்க அகதிகள் நாள் ஜூன் 20 இல் கொண்டாடப்படுவதால் இந்நாள் உலக அகதிகள் நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. பல்வேறு மோதல்களுக்குள் சிக்கி அகதிகளாக தாம் வசிக்கும் நாட்டினுள், பிற நாடுகளிலென இடம்பெயர்ந்து பல்வேறு துன்பங்களுக்குள்ளாகி வாழ்ந்துவரும் அகதிகள் பற்றிய விழிப்புணர்வினை உலக மக்களிடத்தில் ஏற்படுத்துவதே இந்நாளின் முக்கியமான நோக்கமாகும்.

அன்றைய நாள் உலகின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெறும் பல்வேறு போர்களால் அரசியல், சமூகச் சூழல்களால் அகதிகளாக அல்லலுறும் அகதிகளை நினைவு கூறும் வகையில் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், கருத்தரங்குகள், இசை நிகழ்ச்சிகள், நினைவஞ்சலி நிகழ்வுகளெனப் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் (UNHCR) ஒவ்வோர் ஆண்டும் இந்நிகழ்வுகளுக்கான கருப்பொருளைத் தீர்மானிக்கிறது.

இந்நிலையில் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் தமிழ்நாட்டில் அதிகம் என்றாலும், அவர்கள் அகதிகள் அல்ல, நம் நாட்டிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் என்பது அரசியல் தலைவர்கள் பலரது கருத்தாகும், கரூர் அருகே உள்ள ராயனூர், அகதிகள் முகாமில் சுமார் 500 க்கும் மேற்பட்ட வீடுகள், இலங்கை அகதிகளாக குடும்பங்களாக வசித்து வரும் நிலையில் இந்த வீடுகளில் சுமார் 4 ஆயிரத்து 500 க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். 1990 ம் ஆண்டு, இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்து, தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் பகுதிக்கு புலம்பெயர்ந்து, அவர்கள் அங்கிருந்து கரூர் அருகே உள்ள ராயனூர் மற்றும் குளித்தலை அருகே உள்ள அய்யர் மலையை அடுத்துள்ள இரும்பூதிப்பட்டி ஆகிய இரு பகுதிகளில் வசித்து வருகின்றனர்.



கரூர் அடுத்த ராயனூர் பகுதியில், வசிக்கும் இலங்கை புலம்பெயர்ந்த அகதி மக்களுக்கு கடந்த 1990 ஆம் ஆண்டு புலம்பெயர்ந்தவர்கள் ஒரு சிலருக்கு வீடுகள் கட்டிக்கொடுத்த இந்திய அரசும், அதன் கீழ் உள்ள தமிழக அரசும், அதற்கு பின்னர் அவர்களை மறந்ததுடன், சென்ற தி.மு.க ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் தீட்டி அவைகளை இன்று வரை நடைமுறைப்படுத்தாமல் விட்டு விட்டு சென்றுள்ளது. முகாமின் முன்னரே, கடந்த 2011 ம் ஆண்டு, தமிழ்நாடு அரசின் குடிநீர் வடிகால் வாரியத்தின் கீழ், 2011-12 ஆம் ஆண்டிற்கான பயன்பாட்டு நிதியாக ரூ 4.50 லட்சம் நிதியை கொண்டு 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட, மேல்நிலை நீர் தேக்க தொட்டியை அப்படியே விட்டு, விட்டு, அதன் பைப்புகள் அப்படியே அந்தரத்தில் தொங்கும் கவலை நிலையில், காட்சியளிப்பதோடு, அங்குள்ள குடிசை வீடுகள் எப்போது விழுமோ என்று தெரியாமல், ஒரு சில வீடுகளுக்கு மட்டும் அவர்களே, மழை பெய்தால் ஒழுகாத வாறு, தார்பாய்களையும் அமைத்து கொண்டுள்ளார்கள். மேலும், ஆங்காங்கே தேங்கும் சாக்கடை, கழிவுகளினால் தொற்று நோய் பரவும் அபாயம், குடிநீர் வசதி இல்லாமலும், அந்தரத்தில் தொங்கும் சிண்டெக்ஸ் டேங்க் என்று எண்ணற்ற பயன் தராத திட்டங்கள் அப்பகுதி மக்களுக்கு எதுவுமே செய்து தராமல், தமிழக அரசும், கரூர் மாவட்ட நிர்வாகமும் காலம் தாழ்த்துகின்றது.  



கடந்த 2013-ம் ஆண்டில் உலகம் முழுவதும் 8 லட்சம் அகதிகள் கட்டாயமாக நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டு உள்ளனர். இலங்கை, திபெத் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 4.5 லட்சம் மக்கள் அகதிகளாக இந்தியா வந்துள்ளனர்.தவிர பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்தும் அகதிகள் இந்தியா உட்பட பல்வேறு ஆசிய நாடுகளில் இடம் பெயர்ந்துள்ளதாக ஐ.நா. மனித உரிமை அமைப்பு கூறியுள்ளது.

இவ்வுலகில் உள்ள 54 நாடுகளில் இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக வாழ்கின்றனர். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் சுமார் 4.5 லட்சம் இலங்கை மக்கள் அகதிகளாக உள்ளனர்.உலகின் அதிக நாடுகளில் அகதிகளாக வாழும் ஒரே இனம் இலங்கைத் தமிழர்கள் என்று ஐ.நா.வின் சேவை அமைப்பான யுனிசெப் கூறியுள்ளது. இந்நிலையில், உலக அகதிகள் தினம் 20 ம் தேதி நினைவு கூறப்படும் நிலையிலாவது அவர்களுக்கு ஏதாவது, கோரிக்கைகள் நிறைவேற்றுமா ? அரசு என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டுமென்கின்றனர் நடுநிலையாளர்கள்

சி.ஆனந்தகுமார்