1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வியாழன், 9 நவம்பர் 2017 (10:08 IST)

சசிகலா உறவினர்களை வளைத்த வருமான வரித்துறையினர் - காரணம் என்ன?

இன்று காலை முதல் 150க்கும் மேற்பட்ட சசிகலா உறவினர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.


 

 
இன்று காலை முதல் ஜெயா டிவி மட்டுமின்றி அதனை சார்ந்த நிறுவனங்கள், சசிகலாவுக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். 
 
கொடநாடு பங்களா, சென்னை அடையாற்றில் உள்ள தினகரனின் வீடு, மன்னார்குடியில் உள்ள தினகரனின் வீடு, தஞ்சையில் உள்ள நடராஜன் வீடு, புதுக்கோட்டையில் அறந்தாங்கி தினகரன் அணியின் மாவட்ட செயலாளர் வீடு, சென்னை தி.நகரில் பரோலில் வெளிவந்த போது சசிகலா தங்கிய சென்னை தி.நகர் கிருஷ்ணப்பிரியா வீடு, சசிகலாவின் சகோதரர் திவாகரன் வீடு, போயஸ்கார்டன் வீட்டில் உள்ள பழைய ஜெயா தொலைக்காட்சி அலுவலகம், நமது எம்.ஜி.ஆர் அலுவலகம், சசிகலாவின் உறவினர்கள் வீடு என மொத்தம் 150க்கும்  மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 

சென்னை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை, பெங்களூர் ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
 
ஆனால், அங்கு எதுவும் கைப்பற்றியதாக இதுவரை தகவல் எதுவும் வெளிவரவில்லை. ஒவ்வொரு இடத்திலும் 3 அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. 
 
இந்நிலையில், 10 குழுமங்களுக்கு சொந்தமான போலி நிறுவனங்களை குறி வைத்து இந்த சோதனை செய்யப்படுவதாகவும், அதில் 3 குழுமங்கள் சசிகலாவிற்கு சொந்தமானவை எனவும் அதிகாரிகள் கூறியதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அதேபோல், கருப்பு பண ஒழிப்பின் ஒரு பகுதியாகவே இந்த சோதனை நடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.