வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 2 ஜனவரி 2017 (19:27 IST)

3 மாதம் பொருட்கள் வாங்கவில்லை எனில் ரே‌ஷன் கார்டு ரத்து?

தமிழகத்தின் இயங்கிவரும் நியாய விலை கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கான குடும்ப அட்டை கடந்த 2005ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இந்த குடும்ப அட்டை 2009ஆம் ஆண்டு வரை பயன்படுத்தும் வகையில் அச்சிடப்பட்டு இருந்தது.


 

அதன் பிறகு 2010ஆம் ஆண்டு புதிய குடும்ப அட்டை வழங்குவதற்கு பதிலாக, 2010ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை, ஒவ்வொரு ஆண்டுக்கும் உள்தாள் ஒட்டிபடி, பழைய குடும்ப அட்டைகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழக அரசு அடுத்த ஆண்டு முதல் மின்னணு குடும்ப அட்டை (ஸ்மார்ட் கார்டு) வழங்க திட்டமிட்டது. இந்த மின்னணு குடும்ப அட்டை, ஆதார் அட்டையுடன் இணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் ரே‌ஷன் கடைகளில் ஆதார் எண் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 87 சதவீதம் இந்த பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, ரேஷன் கார்டுகளில் ஆதார் எண்ணை சேர்க்காவிட்டால் ரேஷன் பொருட்கள் வழங்கப்படாது எனவும் கூறப்பட்டது. அதன்படி, கடந்த நவம்பர் 30ஆம் தேதி முதல் ஆதார் எண்ணை இணைக்காத ரேஷன் கார்டுகளுக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்படவில்லை.

இதனால் பொதுமக்கள் தங்கள் ரே‌ஷன் கார்டு ரத்து செய்யப்பட்டு விட்டதாக கருதினர். 3 மாதங்கள் பொருட்கள் தொடர்ச்சியாக வாங்கவில்லை என்றால் ரே‌ஷன் கார்டு ரத்தாகி விடும் என்று கருதி வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு மக்கள் நடையாய் நடக்கிறார்கள்.

இந்நிலையில், பொதுமக்களிடம் எழுந்துள்ள இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் உணவு பொருள் வழங்கும் துறையில் இருந்து, அதன் ஆணையர் ஒவ்வொரு வட்ட வழங்கல் அதிகாரி மற்றும் உதவி ஆணையர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அதில், ‘3 மாதங்கள் தொடர்ச்சியாக ரே‌ஷனில் பொருட்கள் வாங்காமல் இருந்தாலும் குடும்ப அட்டை ரத்து செய்யப்படாது. பொது மக்கள் குழப்பம் அடைய வேண்டாம். ஆதார் எண்களை ரே‌ஷன் கடையில் பதிவு செய்வதற்காக ஒரு சில நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.

அதன்படி, ஆதார் எண்களை பதிவு செய்யாதவர்களுக்கு பொருட்கள் வினியோகத்தை நிறுத்த அறிவுறுத்தப்பட்டு இருந்தது. ஆதார் எண் அட்டையுடன் குடும்ப அட்டையையும் கொண்டு ஒரு மனு எழுதி வட்ட வழங்கல் அதிகாரியிடம் கொடுத்தால் அதன் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டு உடனடியாக பொருட்கள் வழங்கப்படும். எக்காரணத்தை கொண்டும் ரே‌ஷன் கார்டு ரத்து ஆகாது என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.