வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Updated : சனி, 19 ஜூலை 2014 (18:53 IST)

திருமணம் செய்ய காதலனுடன் சென்ற மாணவியை கொடூரமாக வேட்டையாடிய 4 மிருகங்கள்

கிருஷ்ணகிரி அருகே ராயக்கோட்டையில் திருமணம் செய்து கொள்வதற்காக காதலனுடன் காரில் சென்ற கல்லூரி மாணவியை சரக்கு ஆட்டோ டிரைவர்கள் வழி மறித்து பாலியல் பலாத்காரம் செய்தனர். 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். 
 
கிருஷ்ணகிரியில் அரசு கல்லூரியில் படித்து வரும் காவேரிப்பட்டணத்தை சேர்ந்த ஒரு மாணவி, அதே ஊரைச் சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்தார். இவர்களின் காதலுக்கு மாணவியின் பெற்றோர் தரப்பில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பெற்றோர் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்தனர். அதன்படி நேற்று மாலை 5 மணிக்கு இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்வதற்காக ராயக்கோட்டை அருகே உள்ள வஞ்சிரநாதேஸ்வரர் ஆலயத்திற்கு காதலனின் காரில் சென்றனர். காதலன் காரை ஓட்டி சென்றார். மாணவி முன் இருக்கையில் அமர்ந்திருந்தார். ராயக்கோட்டை அருகே போடம்பட்டி கூட்ரோட்டில் சென்று கொண்டிருந்த போது இயற்கை உபாதை கழிப்பதற்காக சாலையோரம் காரை நிறுத்தி உள்ளனர். காரில் இருந்து இறங்கி மாணவி மட்டும் மறைவான பகுதிக்கு சென்றார்.
 
அப்போது அப்பகுதியில் நின்று பேசிக்கொண்டிருந்த ராயக்கோட்டையைச் சேர்ந்த வாடகை சரக்கு ஆட்டோ ஓட்டி வரும் 4 வாலிபர்கள், மாணவி தனியாக செல்வதை பார்த்து அங்கு வந்தனர். அங்கு மாணவியை பிடித்து பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர். அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சல் போட்டதை கேட்டு, காருக்குள் இருந்த காதலன், காதலியை நோக்கி ஓடிச்சென்றார்.

அப்போது 4 வாலிபர்களும் சேர்ந்து காதலனை சரமாரி தாக்கி உள்ளனர். பின்னர் அவரின் கை, கால்களை கட்டி புதருக்குள் வீசி விட்டு, கல்லூரி மாணவியை 4 பேரும் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த பெண்ணுடன் தனித்தனியாக நின்று, செல்போனில் படம் எடுத்துக்கொண்ட ஆசாமிகள், பின்னர் அங்கிருந்து தப்பியோடி உள்ளனர். அப்போது ஒரு வாலிபர் மட்டும், தனது முகவரியை கொடுத்து, நாங்கள் கூப்பிடும் போதெல்லாம் வரவேண்டும் என்று மிரட்டியுள்ளார்.
 
அக்கும்பல் தப்பி சென்ற சிறிது நேரத்தில் அப்பகுதியில் மாடு மேய்த்துக்கொண்டிருந்தவர்கள் பார்த்து இருவரையும் மீட்டனர். பின்னர் இருவரும் காரில் ராயக்கோட்டை காவல் நிலையத்திற்கு சென்று நடந்த சம்பவத்தை கூறி கதறி அழுதுள்ளனர். காவல்துறையினர் அவர்களிடம் விசாரித்தனர். பின்னர் பாதிக்கப்பட்ட மாணவியை சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்த சேலம் சரக டி.ஐ.ஜி. அமல்ராஜ் (பொறுப்பு) எஸ்பி கண்ணம்மா இன்று காலை ராயக்கோட்டை காவல் நிலையத்திற்கு வந்தனர். அங்கிருந்த மாணவியின் காதலனிடம் விசாரணை நடத்தினார்.
 
இதனிடையே பாலியல் பலாத்காரம் செய்து தப்பிய கும்பலில் ஒருவன் கொடுத்த முகவரியை வைத்து நேற்று நள்ளிரவில் அவனின் வீட்டிற்கு சென்று காவல்துறையினர் பிடித்து வந்தனர். அவனிடம் விசாரணை நடத்திய காவல்துறையினர், கூட்டாளிகள் 3 பேரையும் இன்று அதிகாலையில் பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் சுப்பிரமணி, பிரகாஷ், இன்னொரு பிரகாஷ், மற்றும் மணி என்ற நால்வர் இந்தக் கொடூர செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.