1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 11 டிசம்பர் 2018 (15:32 IST)

ஏன் ராஜினாமா செய்தேன்? 'தந்தி டிவி' ரங்கராஜ் பாண்டே வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ

தந்தி டி.வியின் தலைமை செய்தி ஆசிரியர் பதவியில் இருந்து விலகியது ஏன் ரங்கராஜ் பாண்டே வீடியோ மூலம் விளக்கம் அளித்துள்ளார்.

அரசியல்வாதிகள், சினிமா நட்சத்திரங்கள், ஆன்மீக வாதிகள், சமூக ஆர்வலர்கள் என தமிழகத்தின் அனைத்து துறையில் உள்ளோரையும் தனது நிகழ்ச்சிகளில் நேர்காணல் செய்தப் பெருமைக்குரியவர் ரங்கராஜ் பாண்டே. தந்தி டி.வியில் கேள்விக்கென்ன பதில், ஆயுத எழுத்து போன்ற நேர்காணல் நிகழ்ச்சிகள் மூலம் சமூக வலைதளங்களிலும் வெகுப் பிரபலம்.

இந்நிலையில் ரங்கராஜ் பாண்டே திடிரெனத் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த ராஜினாமாவுக்கு சமூக வலைதளங்களில் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு விவாதமாகின. இதனால் தற்போது பாண்டே ஒரு வீடியோ மூலம் தனது முடிவுக்கு விளக்கம் அளித்துள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது :-

‘வணக்கம் அன்பு நண்பர்களே, நான் தந்தி டி.வி. யின் தலைமை செய்தி ஆசிரியர் பதவியில் இருந்து விலகி இருக்கிறேன். ஆனால் ஊடகத்துறையில் இருந்து விலகவில்லை. நான் தொடர்ந்து ஒரே வேலையை செய்வதால் ஏற்படும் அயர்ச்சியின் காரணமாகதான் எடுத்துள்ளேன். தந்தி டிவி குழுமத்தோடு எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அவர்கள் என்னை ராஜாவைப் போல பார்த்துக் கொண்டார்கள். என்னுடைய ராஜினாமாவால் இளைஞர்களுக்கான வாய்ப்பு அதிகமாகும் என நம்புகிறேன். இந்த முடிவை தந்தி குழுமமும் பெருந்தன்மையாக ஏற்றுக்கொண்டது. இது புரிதலோடு எடுக்கப்பட்ட ஒரு பிரிதல். அடுத்து என்ன செய்யப்போகிறேன் என தெரியவில்லை. எனது இத்தனை வருட ஊடக வாழ்க்கையில் அதிகமாக சம்பாதித்தது உங்களைத்தான். உங்களை என்றும் இழக்க மாட்டேன். பயணங்கள் எப்படி அமையும் எனத் தெரியவில்லை. மீண்டும் சந்திப்போம்.’ எனத் தெரிவித்துள்ளார்.