வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: வியாழன், 9 ஜூன் 2016 (10:49 IST)

ராம மோகன் ராவ் -க்கு தலைமைச் செயலாளர் பதவி ஏன்? ராமதாஸ் வெளியிடும் ரகசியம்

ராம மோகன் ராவ் -க்கு தலைமைச் செயலாளர் பதவி ஏன்? ராமதாஸ் வெளியிடும் ரகசியம்

தமிழக தலைமைச் செயலாளராக, தகுதியும் திறமையும் இல்லாத ராம மோகன் ராவ் நியமிக்கப்பட்டுள்ளதாக ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து ஞானதேசிகன் நீக்கப்பட்டு, புதிய தலைமைச் செயலாளராக பி. ராம மோகன் ராவ் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
 
தலைமைச் செயலாளர் நிலையில் இருக்கும் அதிகாரிகளில் மூத்தவரை தலைமைச் செயலாளராக நியமிப்பது தான் இதுவரை கடைபிடிக்கப்பட்டு வந்த மரபு.
 
ஆனால், ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன் இந்த மரபு காற்றில் பறக்கவிடப்பட்டது. தமிழ்நாடு பிரிவு (Tamil Nadu Cadre) ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் 24 பேர் தலைமைச் செயலாளர் நிலையில் உள்ளனர். இவர்களில் ராம மோகன் ராவ் 23 ஆவது இடத்தில் உள்ளார்.
 
இராம மோகன் ராவை விட தகுதியும், திறமையும் உள்ள 1981 ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் 22 பேர் இருக்கும் நிலையில் அவர்கள் அனைவரையும் புறக்கணித்து விட்டு, 1985 ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த ராம மோகன் ராவுக்கு தலைமைச் செயலாளர் பதவியை முதல்வர் ஜெயலலிதா வழங்கியிருக்கிறார்.
 
ராமமோகன் ராவை தலைமைச் செயலராக நியமிக்கும் அளவுக்கு அவருக்கு சிறப்புத் தகுதி ஏதேனும் உள்ளதா? என்று கேட்டால், இல்லை என்பது தான் தமிழக அரசியல் நிலவரம் அறிந்த அனைவரின் பதிலாக இருக்கும்.
 
ஜெயலலிதா ஆட்சியில் தகுதிக்கும் திறமைக்கும் மரியாதை இல்லை. ஊழலுக்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகளுக்கும், அதிகாரத் தரகர்களாக இருக்கும் அதிகாரிகளுக்கும் தான் மரியாதை என்பதற்கு புதிய தலைமைச் செயலாளராக ராம மோகன் ராவ் நியமிக்கப்பட்டிருப்பது தான் உதாரணம் ஆகும். இந்த நியமனம் கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.