வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 16 மே 2017 (04:01 IST)

ரஜினி தமிழரே கிடையாது. அரசியலுக்கு வந்தால் தோல்வி அடைவார்: சுப்பிரமணியன் சுவாமி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று ரசிகர்களிடையே பேசியபோது ஆண்டவன் விரும்பினால் அரசியலுக்கு வருவேன் என்று வழக்கம்போல் ஸ்டண்ட் அடித்தார். அவருடைய பேச்சை எந்த அரசியல்வாதியும் சீரியஸாக எடுத்து கொள்ளவில்லை. இருப்பினும் பாஜக மட்டும் சற்றும் மனந்தளராமல் ரஜினியை தங்கள் பக்கம் இழுக்க தொடர்ந்து முயற்சித்து வருகிறது.



 


இந்த நிலையில் பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ரஜினியின் அரசியல் பிரவேச பேச்சு குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறியதாவது:  ”ரஜினிக்கென ஒரு கொள்கையே கிடையாது. அவர் தமிழரே கிடையாது. அவர் கர்நாடகாவில் பிறந்த மராத்திய பின்புலத்தை சார்ந்தவர். தற்போது அவருடைய அரசியல் பார்வையில் ஒரு தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது. அதனால்தான் அரசியல் குறித்த கருத்தையெல்லாம் பற்றி பேசி வருகிறார். ஆனால் அவர் அரசியலுக்கு வந்தால், கண்டிப்பாக தோல்வியடைவார்.” என ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சுப்ரமணியன் சாமி ரஜினியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

ஏற்கனவே ரஜினி இலங்கைக்கு செல்லவிருந்த நிகழ்ச்சியை ரத்து செய்தபோது ரஜினியை கடுமையாக விமர்சித்தவர்தான் இந்த சுப்பிரமணியன் சுவாமி. ரஜினி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த சுவாமிக்கு அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.