வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 14 ஏப்ரல் 2018 (16:07 IST)

நிலைமை சரியில்லை ; அரசியல அப்புறம் பாத்துக்கலாம் : ரஜினி முடிவு?

தமிழ்நாட்டில் தற்போது தனக்கு சாதகமில்லாத சூழ்நிலை நிலவுதால், அரசியல் அறிவிப்பை நடிகர் ரஜினிகாந்த் தள்ளிப்போட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

 
ஆன்மீக அரசியலை முன்னெடுப்பதாக அறிவித்த ரஜினி காவிரி நீர், ஸ்டெர்லைட், மீத்தேன், திருச்சி உஷா மரணம் உள்ளிட்ட  மக்கள் பிரச்சனைகளில் பெரும் அமைதி காத்தார். அதனால், அவர் எதற்கும் கருத்து தெரிவிக்காமல் இருக்கிறார் என்கிற குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், தான் இன்னும் முழுநேர அரசியல்வாதி ஆகவில்லை என ரஜினி பதில் கூறி வந்தார். 
 
அந்நிலையில்தான், காவிரி நீர் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, சென்னையில் ஐ.பி.எல் போட்டியை நடத்தக்கூடாது என பாரதிராஜா தலைமையிலான அமைப்பினர் சென்னை அண்ணாசாலை அருகேயுள்ள வாலஜா சாலையில் போராட்டம் நடத்தினர். அப்போது, அவர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். அந்த களோபரத்தில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சிலர் போலீசாரை திருப்பி தாக்கினர். 
 
அது தொடர்பான வீடியோவை வெளியிட்ட ரஜினி, போலீசாரின் மீது வன்முறையில் ஈடுபடுவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருந்தார். இது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பாஜகவிற்கு ஆதரவாகவே ரஜினி பேசுகிறார். அவர் போராட்டங்களில் கலந்து கொண்டால்தான் அவருக்கு போலீசார் பற்றி தெரிய வரும். அவரின் டிவிட்டர் அதிகாரத்திற்கு ஆதரவாகவே பேசுகிறது. மக்கள் பிரச்சனைளை அவர் பேசுவதில்லை என அமீர் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்தனர். ரஜினியை பூ என நினைத்தேன் ஆனால், அவர் பூ நாகமாக இருக்கிறார். அவர் வாயை மட்டும் அசைக்கிறார். அவருக்கு யாரோ குரல் கொடுக்கின்றனர் என பாரதிராஜா கூறினார். மேலும், ரஜினி தான் நடித்துள்ள திரைப்படங்களில் போலீசாரை தாக்கும் காட்சிகளை நெட்டிசன்கள் பதிவு செய்து ரஜினியை கிண்டலடித்தனர்.
 
ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டான இன்று ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சியின் பெயர், சின்னம் மற்றும் கொடி பற்றிய அறிவிப்பை பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்தி வெளியிடுவார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
 
அந்நிலையில், தனது நிர்வாகிகளுடன் நேற்று ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தினார். அதில், தற்போது தனக்கு சாதகமான சூழ்நிலை இல்லாததால், தற்போதைக்கு அரசியல் அறிவிப்பை தள்ளி வைப்போம் என ரஜினி முடிவெடுத்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.