1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 25 ஏப்ரல் 2018 (11:26 IST)

இன்னும் பலருக்கு தொடர்பு - விசாரணையில் பேராசிரியர் முருகன் பகீர் தகவல்

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் மதுரை பல்கலைக்கழக அதிகாரிகள் பலரும் சம்பந்தப்பட்டுள்ளனர் என கைது செய்யப்பட்ட பேராசிரியர் முருகன் போலீசார் விசாரணையில் தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயற்சித்த அருப்புக்கோட்டை கல்லூரி ஒன்றின் கணித பேராசிரியை நிர்மலாதேவி வழக்கை கவர்னர் நியமனம் செய்த சந்தானம் தலைமையிலான குழுவும், சிபிசிஐடியும் தனித்தனியே விசாரணை செய்து வருகின்றனர்.   
 
இந்த விவகாரத்தில் பேராசிரியை நிர்மலாதேவிக்கு துணை பேராசிரியர் முருகன் என்பவரும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி என்பவரும் உதவியதாக சிபிசிஐடி போலீசார் சந்தேகம் அடைந்தனர். அவர்கள் இருவரும் திடீரென தலைமறைவானதால் போலீசாரின் சந்தேகம் உறுதியானது. அதில், முருகன் மட்டும் போலீசாரிடம் சிக்கியுள்ளார். 
 
எனவே, நிர்மலா தேவி மற்றும் முருகன் ஆகியோரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், கருப்பசாமியை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில், மதுரை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் பி.எச்.டி மாணவர் கருப்பசாமி இன்று காலை சரணடைந்தார். 

 
தொடக்கத்தில் போலீசாரின் விசாரணைக்கு முருகன் சரியான ஒத்துழைப்பு அளிக்கவில்லையாம். நிர்மலா தேவியிடம் அவர் செல்போனில் அடிக்கடி பேசியதற்கான ஆதாரங்களை காட்டிய பின் வாய் திறந்து பேசியுள்ளார். அப்போது பல்கலைக்கழக அதிகாரிகள் பலருக்கும் இதில் தொடர்பு இருப்பதாக அவர் தெரிவித்தாராம். 
 
மேலும், தேவாங்கர் கல்லூரி மட்டுமில்லாமல், பல்கலைகழகத்திற்கு உட்பட்ட வேறு சில கல்லூரிகளிலும் முருகன் தவறான செயல்பாடு வைத்துள்ளது போலீசாருக்கு தெரியவந்துள்ளது.  அவரிடம் மேலும் விசாரிக்க வேண்டியுள்ளதால், அவரை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.