செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 2 மார்ச் 2019 (11:11 IST)

அதிமுக & தேமுதிக கூட்டணி வரும்… ஆனா வராது - பேச்சுவார்த்தையில் இ...ழுபறி !

அதிமுக மற்றும் தேமுதிக இடையிலானக் கூட்டணி உறுதியாகிவிட்டதாக தகவல்கள் வெளியான நிலையில் இன்னமும் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருவதாகவேக் கூறப்படுகிறது.

தமிழக அரசியல் களம் இப்போது தேமுதிகவை மையமாகக் கொண்டு செயல்பட்டுக் கொண்டு வருகிறது. தேமுதிக வின் ஒவ்வொரு நடவ்டிக்கைகளும் தீவிரமாகக் கவனிக்கப்பட்டு வருகின்றன. தேமுதிகவை திமுக அல்லது அதிமுக ஆகிய இரண்டுக் கட்சிகளில் யார் தங்கள் கூட்டணிக்குள் கொண்டுவரப் போகிறது என்பதுதான் தமிழக அரசியலின் தற்போதைய மில்லியன் டாலர் கேள்வி.

முதலில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணையையேப் பெருமளவில் நம்பியிருந்தது தேமுதிக. இது தொடர்பானப் பேச்சுவார்த்தை பாஜகவுடன் நடைபெற்று வருவதாகவும் தேமுதிக மாநில செயலாளர் எல்.கே. சுதீஷ் தெரிவித்திருந்தார். அதனால் அதிமுக, பாஜக மற்றும் தேமுதிக அடங்கியக் கூட்டணி உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாமக மற்றும் பாஜக ஆகியவற்றுடனான டீல் ஓகே ஆனதும் தேமுதிகவை மாற்றான் தாய் பிள்ளையாக பார்க்க ஆரம்பித்தது அதிமுக.

பாமக அளவிற்கு தங்களுக்கும் 7 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று தேமுதிக சைடில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. ஏற்கன்வே 12 தொகுதிகளை இழந்துவிட்ட அதிமுக மேலும் 7 தொகுதிகளை இழப்பதற்கு சம்மதிக்க மறுத்தது. இதனால் இருக் கட்சிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லாமல் அப்படியே இழுத்துக்கொண்டு கிடந்தது. இந்த சூழ்நிலையைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள நினைத்த திமுக தலைமை தேமுதிக வுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட ஆரம்பித்தது.

இதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சென்று சந்தித்து உடல்நலம் விசாரித்தார். இப்படி திடீரென்று தேமுதிக தமிழக அரசியலின் மையம் ஆனது. இருக் கட்சிகளும் இழுக்கப் பார்த்ததால் தேமுதிக இறங்கி வராமல் முரண்டு பிடிக்க ஆரம்பித்தது. ஆனால் இருக் கட்சிகளும் தேமுதிக கேட்கும் 7 தொகுதிகளைக் கொடுக்கத் தயாராயில்லை. அதனால் ஒருக் கட்டத்தில் 5 தொகுதிகள் வரை கொடுப்பதாக சொல்லிப்பார்த்த திமுக தேமுதிகவை இழக்க முடிவு செய்து கூட்டணிப் பேச்சுவார்த்தையை நிறுத்திக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

அதனையடுத்து நேற்று கட்சி அலுவலகத்தில் கூட்டணிப் பேச்சுவார்த்தைக் குழுவோடு ஆலோசனையில் ஈடுபட்டார் விஜயகாந்த். அதன் பிறகு தேமுதிக  அதிமுகவோடுக் கூட்டணி வைப்பது உறுதி என்று செய்திகள் வெளியாக ஆரம்பித்தன. அதிமுக கூட்டணியில் தேமுதிக விற்கு 5 சீட்டுகள் மற்றும் தேர்தல் நிதியாக 150 கோடி ரூபாய் என அறிவிக்கப்பட்டது. அதையடுத்து நேற்று மாலை கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்னமும் அதற்கான சமிக்ஞைகள் எதுவும் தெரியவில்லை.

இதுகுறித்து தேமுதிக வட்டாரத்தில் விசாரித்ததில் ‘என்ன ஆனாலும் சரி 7 தொகுதிகளுக்கு கீழ் இறங்கி வர விஜயகாந்த் ஒத்துக்கொள்ளவில்லையாம். பாமகவை விடப் பலம் வாய்ந்த கட்சியான நாங்கள் எதற்கு அவர்களை விடக் கம்மியானத் தொகுதிகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் இதை ஒரு கௌரவ பிரச்சனையாக தேமுதிக கருதுகிறது’ என்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.