வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 13 ஏப்ரல் 2019 (10:52 IST)

எடப்பாடி தமிழரா ? இல்லையா ? – ராகுலுக்கு பொன்னார் கேள்வி !

தமிழரை தமிழர்தான் ஆளவேண்டும் எனக் கூறியுள்ள ராகுலுக்கு மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பதில் கூறியுள்ளார்.

18ஆம் தேதி தமிழ்நாட்டிலுள்ள 39 மக்களவைத் தொகுதிகளிலும், புதுச்சேரியிலும் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி காங்கிரஸ், பாஜக, திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் மாநிலம் முழுவதும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதையொட்டி நேற்று தமிழகம் வந்த தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, கிருஷ்ணகிரி, சேலம், தேனி, மதுரை ஆகிய இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசினார்.

கிருஷ்ணகிரியில் பேசிய ராகுல் ‘இந்தியா மொழி, இனம், கலாசாரம் உள்ளிட்ட பல்வேறு வேறுபாடுகளை கொண்ட நாடு. அதை புரிந்துகொள்ளாத நரேந்திர மோதி வெறுப்புணர்வு அரசியலை கொண்டு தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கிறார். தமிழர்களையும், தமிழையும் யாராலும் கட்டுப்படுத்த முடியாது. தமிழகத்தை தமிழர்தான் ஆளவேண்டும்" என்று கூறினார்.

இதற்குப் பதில் அளித்துள்ள பாஜக மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ‘தமிழகத்தை இப்போது ஆளும் எடப்பாடி பழனிச்சாமி தமிழர் இல்லையா ?..அவர் பச்சைத் தமிழன்.. காங்கிரஸ் கட்சியில் உள்ள பெண்களுக்கேப் பாதுகாப்பு இல்லை. காங்கிரஸ் கட்சியின் பிரபலமான பெண் தலைவர் ஒருவருக்கே பாலியல் தொல்லைகள் கொடுக்கப்படுகின்றன்’ எனப் பதிலளித்துள்ளார்.