வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 9 பிப்ரவரி 2018 (09:45 IST)

தப்பி சென்ற ரவுடிகள் : அரசியல்வாதிகள் ஆதரவுடன் பதுங்கல்?

சென்னையில் ஒரே இடத்தில் கைது செய்யப்பட்ட மற்றும் தப்பி சென்ற பல ரவுடிகள் அரசியல்வாதிகளின் ஆதரவுடன் வாழ்ந்து வருவது தெரியவந்துள்ளது.


 
தனது அரசியல் எதிரிகளை ரவுடிகள் மூலம் அரசியல்வாதிகள் தீர்த்துக் கட்டுவது என்பதை சினிமாவில் தொடர்ந்து நாம் பார்த்து வருகிறோம். நிஜத்தில் இருப்பதைத்தான் சினிமாவில் எடுக்கிறோம் எனவும் சினிமா உலகத்தினர் கூறி வருகின்றனர்.
 
அரசியல்வாதிகளுக்கும், ரவுடிகளுக்கும் மறைமுக தொடர்பு இருந்து வருவது காலம் காலமாக நடந்து வருகிறது. இந்நிலையில், சென்னை மாங்காடு பகுதியில் கைது செய்யப்பட்ட மற்றும் தப்பி சென்ற பல ரவுடிகள் அரசியல் பிரமுகர்களின் ஆதரவோடு உலவி வந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

 
சென்னை சூளைமேட்டில் ரவுடியாக வலம் வந்த பிரபல ரவுடி பினுவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் 75 ரவுடிகளை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அப்போது, முக்கிய குற்றவாளியான பினு மற்றும் அவனின் நண்பர்கள் அங்கிருந்து தப்பிவிட்டனர். பல்லு மதன் என்ற ரவுடியை பள்ளிக்கரணை பகுதில் போலீசார் மடக்கிப் பிடித்த பின், அவர் கூறிய தகவலின் படிதான் போலீசார் இந்த ஆப்பரேஷனையே நிகழ்த்தியுள்ளனர். 
 
பல்லு மதன் மீது 3 கொலை வழக்கு நிலுவையில் உள்ளது. இவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பல்லு மதன் தேனாம்பேட்டையில் உள்ள ஒரு பெண் அரசியல் பிரமுகர் ஒருவர் ஆதரவோடு செயல்பட்டு வந்துள்ளார். அவர் சொல்லும் வேலைகளை செய்யும் மதனுக்கு மாதம்தோறும் ஒரு பெரிய தொகை  கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
 
அதேபோல், சி.டி. மணி என்கிற ரவுடியையும் பல வருடங்களாக போலீசாருக்கு தலைவலியாக இருந்து வருகிறார். இவருக்கு ஒரு போலீஸ் அதிகாரி பக்கபலமாக இருப்பதாகவும், அவருக்கு பெரிய அரசியல் பின்னணி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
இப்படி பல ரவுடிகளும் அரசியல் பின்னணியில் இருப்பது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம்.