வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வியாழன், 28 ஜூலை 2016 (13:12 IST)

பியூஷ் மனூஷ் தாக்கப்பட்ட வீடியோ சிக்கியது: கலக்கத்தில் சிறை அதிகாரிகள்

சேலம் அருகே மேம்பாலம் கட்டும் பணியை தடுத்து நிறுத்தியதாக கூறி சூழியல் ஆர்வலர் பியூஷ் மனூஷ் கைது செய்யப்பட்டு சிறையில் கடுமையாக தாக்கப்பட்டது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


 
 
13 நாட்கள் கழித்து சிறையில் இருந்த பியூஷ் மனூஷ் ஜாமீனில் வெளியே வந்தார். தன்னை 30 பேர் சேர்ந்து தாக்கியதாகவும், நிர்வானப்படுத்தி தாக்கியதாகவும் பியூஷ் மனூஷ் கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
இதனையடுத்து மனித உரிமை அமைப்பு தானாக முன்வந்து பியூஷ் மனூஷ் தாக்கப்பட்டது தொடர்பாக தமிழக செயலாளருக்கும் காவல்துறைக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. பின்னர் சிறையில் நடந்தது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு வேலுரர் சரக சிறைத்துறை டிஜஜி முகமது ஹனிபாவிற்கு, சிறைத்துறை ஏடிஜிபி உத்தவின் பெயரில், விசாரணை நடத்தபட்டது.
 
அதிகாரிகள் சிறையில் விசாரணை நடத்திய போது, சிறையின் நுழைவு வாயிலில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோவை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் பியூஷ் மனூஷ் கொடூரமாக தாக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.
 
அந்த வீடியோவில், கைதாகி சிறைக்கு வரும் பியூஷ் மனூஷை ஜெயிலர் சிறைக்கு அழைத்து செல்கிறார். அவருக்கு பின்னால் பல காவலர்கள் வேகமாக சிறைக்குள் செல்கிறார்கள். பின்னர் 5 நிமிடத்திற்கு பின்னர் பியூஷ் மனுஷை கைத்தாங்கலாக வெளியே அழைத்து வருகிறார்கள்.
 
நடக்க முடியாமல் வரும் பியூஷ் மனூஷ் செருப்பு போடுவதற்காக கீழே குனியும் போது தடுமாறி கீழே விழுகிறார். பின்னர் அங்கு வரும் அதிகாரி ஒருவர் பியூஷ் மனூஷை ஓங்கி கன்னத்தில் அடிக்கிறார் போன்ற காட்சிகள் பதிவாகி உள்ளன.
 
இந்த வீடியோவை பார்த்த அதிகாரிகள் பியூஷ் மனூஷ் கொடூரமாக தாக்கப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளனர். இதனால் சிறை அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.