1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 2 செப்டம்பர் 2020 (10:30 IST)

அமானுஷ்ய நம்பிக்கைகள்; தந்தையை வீட்டிற்குள்ளேயே புதைத்த மகன்!

பெரம்பலூர் அருகே இறந்த தந்தையின் உடலை அமானுஷ்ய நம்பிக்கைகளின் காரணமாக வீட்டிற்குள்ளேயே மகன் புதைத்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் களரம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் 75 வயதான ராமசாமி. இவருக்கு மூன்று மகன்கள் இருந்த நிலையில் முன்றாவது மகன் மனநிலை குறைபாட்டுடன் இருந்த நிலையில் சில ஆண்டுகள் முன்னர் காணாமல் போயிருக்குறார். மற்ற இரண்டு மகன்களும் திருமணமாகி வேறு ஊர்களில் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் ராமசாமி உயிரிழந்துள்ளார். இரங்கலுக்கு வந்த இரண்டாவது மகன் பாலகிருஷ்ணன் தனது தந்தையை வீட்டிற்குள்ளேயே புதைக்க குழி தோண்டியிருக்கிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் உடலை மக்கள் வாழும் பகுதியில் புதைக்க கூடாது என வாதிட்டுள்ளனர். ஆனால் அதை கண்டுகொள்ளதாக பாலகிருஷ்ணன் தந்தையை உட்கார வைத்த நிலையில் புதைத்து அந்த பகுதியில் அறை ஒன்றையும் எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து கிராம மக்கள் அளித்த புகாரின் பேரில் அங்கு விரைந்த போலீஸார் ராமசாமியின் உடலை சுடுகாட்டிற்கு கொண்டு செல்ல அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் அதை மறுத்த பாலகிருஷ்ணன் காவலர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பாலகிருஷ்ணனை காவல் வாகனத்தில் வைத்து மூடிவிட்டு ராமசாமியின் உடலை தோண்டி எடுத்து முறையாக அடக்கம் செய்துள்ளனர்.

பாலகிருஷ்ணன் அமானுஷ்ய சக்திகள், சித்தர்கள் போன்ற விவகாரங்களில் நம்பிக்கை உடையவர் என்றும், சித்தர்கள் வாக்குப்படி தந்தை உடலை புதைக்க முயன்றதாகவும் கூறியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.