1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : சனி, 4 பிப்ரவரி 2017 (14:48 IST)

’தினம் 10 திருக்குறள்களை ஒப்புவித்தால் ஜாமீன்’: நீதிபதி விநோத உத்தரவு

முன்ஜாமீன் கோரிய மாணவர்கள் 10 நாட்களுக்கும் தினம் 10 திருக்குறளை ஒப்புவித்தால் அவர்களுக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கலாம் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ள சம்பவமும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி உள்ளது.


 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த 3 கல்லூரி மாணவர்கள் முன் விரோதம் காரணமாக, காரமடை பாலாஜி நகரை சேர்ந்த துரைசிங்கம் என்பவரை தாக்கியுள்ளனர். இது குறித்து காரமடை காவல் துறையினர் 3 மாணவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இந்நிலையில், 3 பேரும் மேட்டுப்பாளையம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, மாணவர்கள் 3 பேரும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார் மாணவர்கள் 3 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கினார்.

அவர் தனது உத்தரவில், ‘நீதிமன்றத்தின் நிபந்தனைகளின் படி மாணவர்கள் 3 பேரும், தினமும் 10 திருக்குறளை மனப்பாடம் செய்து, மேட்டுப்பாளையம் அரசு ஆண்கள் பள்ளி தமிழாசிரியரிடம் ஒப்புவிக்க வேண்டும்.

இவ்வாறு 10 நாட்களுக்கு, 10 குறள் வீதம் மொத்தம் 100 திருக்குறளை ஒப்புவிக்க வேண்டும், அதன் பின்னர் இந்த மாணவர்கள் திருக்குறளை ஒப்புவித்தனர் என கோர்ட்டுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சான்றிதழ் வழங்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.