1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : புதன், 8 மார்ச் 2017 (13:42 IST)

போயஸ்கார்டனில் குடியேறும் ஓ.பி.எஸ். - பின்னணி என்ன?

தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தற்போது வசித்து வரும் வீட்டை அரசிடம் ஒப்படைத்து விட்டு, போயஸ் கார்டனில் குடியேறவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.


 

 
ஓ.பி.எஸ் தற்போது சென்னை கிரீன்வேஸ் சாலையில், அரசு அவருக்கு ஒதுக்கியுள்ள வீட்டில் குடியிருந்து வருகிறார். சசிகலாவிற்கு எதிராக அவர் களம் இறங்கினார். ஆனால், ஆட்சியை அவரால் தக்க வைத்துக் கொள்ளமுடியவில்லை. சசிகலா நியமித்த எடப்பாடி பழனிச்சாமியே முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 
 
இந்நிலையில், ஓ.பி.எஸ் தங்கியிருக்கும் அரசு பங்களாவை காலி செய்யும் படி தமிழக அரசு அவருக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளது. சசிகலா ஆதரவு பெற்ற அரசு நடப்பதால், அரசு தரப்பில் அவருக்கு நெருக்கடி கொடுக்கப்படுவதாக தெரிகிறது. அதேபோல், அவரது வீட்டின் முன்பு இருந்த அறிவிப்பு பலகையும் 2 நாட்களுக்கு முன்பு அகற்றப்பட்டது.  
 
தனது வீட்டை காலி செய்ய 6 மாதம் அவகாசம் கொடுக்கும் படி ஓ.பி.எஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அதற்கு அரசிடமிருந்து எந்த சாதகமான பதிலும் வரவில்லை. எனவே, வீட்டை உடனடியாக காலி செய்யும் நிலைக்கு ஓ.பி.எஸ் தள்ளப்பட்டுள்ளார். எனவே அவர் வாடகைக்கு வீடு தேடி வருவதாக சில நாட்களுக்கு  முன்பு செய்திகள் வெளியானது.
 
இந்நிலையில் அவர் போயஸ்கார்டனில் உள்ள ஜெ.வின் வீட்டின் அருகே குடியேறப்போவது தெரியவந்துள்ளது. ஜெ. வீட்டின் பின்புறம் உள்ள வீனஸ் காலணியில் அவர் குடியேறுகிறார். அந்த வீட்டிலேயே, தனது ஆதரவாளர்கள் மற்றும் கட்சி தொண்டர்களை அவர் சந்திக்க முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. எனவே, அதிக தொண்டர்கள் அமரும் வகையில் வீட்டை மாற்றம் செய்வதற்காக பணிகள் நடைபெற்று வருகிறது.