1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : சனி, 5 ஆகஸ்ட் 2017 (09:45 IST)

அதிமுக அணிகள் இணைப்பு: நிர்வாகிகளுக்கு ஓபிஎஸ் அவசர அழைப்பு!

அதிமுக அணிகள் இணைப்பு: நிர்வாகிகளுக்கு ஓபிஎஸ் அவசர அழைப்பு!

இன்றைய அரசியல் சூழல் இப்படி இருக்கும் என கட்சி தாண்டி அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கின்றனர். அதிமுகவில் அடுத்தடுத்து நடக்க இருக்கும் அரசியல் நகர்வுகளை அனைத்து கட்சியினரும் கவனித்து வருகின்றனர்.


 
 
அதிமுகவில் சசிகலா அணி எடப்பாடி அணியாக மாறியதில் இருந்து தினகரன் அணியும் கூடவே இலவச இணைப்பாக உருவாகியுள்ளது. தினகரனை கட்சியில் இருந்து ஒதுக்கி வைப்பதாக எடப்பாடி அணியினர் கூறியதில் இருந்து தினகரன் கட்சியை தனது கட்டுப்பாடி எப்படியாவது கொண்டு வந்து நிலைமையை தனக்கு சாதகமாக மாற்ற முயற்சித்து வருகிறார்.
 
அதற்காகவே அதிமுகவின் ஓபிஎஸ் அணியையை ஆகஸ்ட் 4-ஆம் தேதிக்குள் இணைக்கவில்லையென்றால் ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் கட்சி பணிகளில் தீவிரமாக களம் இறங்குவேன் என கூறினார். தினகரன் கொடுத்த கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில் ஓபிஎஸ் அணி இன்னமும் இணையவில்லை.
 
இதனையடுத்து ஏற்கனவே அறிவித்தபடி தினகரன் தனது ஆதரவாளர்களுடன் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்து ஆலோசனை நடத்துவாரா என்ற பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் எடப்பாடி அணி தினகரனை கட்சி அலுவலகத்தில் நுழைய விடாமல் தடுக்க பல வேலைகளை செய்து வருவதாக கூறப்படுகிறது.
 
மேலும் எடப்பாடி அணி ஓபிஎஸ் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்தி அதிமுகவை இணைக்க முயற்சித்து வருகிறது. ஆனால் ஓபிஎஸ் அணி இதுவரை அதற்கு பிடி கொடுக்காமல் இருந்தது. இந்நிலையில் அரசியல் சூழல் பரபரப்பாக இருப்பதால் ஓபிஎஸ் தனது அணி நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
 
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கட்சி நிர்வாகிகள் அனைவரும் இன்று சென்னைக்கு வருமாறு ஓபிஎஸ் நேற்று அழைப்பு விடுத்தார். இன்று நடைபெற உள்ள இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக அணிகள் இணைப்பு குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.