1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : வெள்ளி, 3 பிப்ரவரி 2017 (17:46 IST)

ஜெ.வாக உருமாறும் ஓ.பி.எஸ் - சசிகலா தரப்பு அதிர்ச்சி

தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் நடவடிக்கைகளால், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தரப்பு அதிர்ச்சியில் ஆழ்ந்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.


 

 
அதிமுக பொதுச்செயலாளர் பதவியை தொடர்ந்து, சசிகலாவை தமிழக முதல்வர் பதவியில் அமர வைக்க வேண்டும் என்பதே அவரது குடும்பத்தினரின் விருப்பமாக இருக்கிறது. ஆனால், இதுவரை பணிவு காட்டி வந்த தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் நடவடிக்கைகளில் ஏற்பட்டு மாற்றங்கள் அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.
 
முதல்வராக நியமிக்கப்பட்ட பின் சில முறை போயஸ் கார்டன் சென்று வந்த ஓ.பி.எஸ், தற்போது அங்கு செல்வதை நிறுத்தி விட்டார். மேலும், வர்தா புயல், ஜல்லிக்கட்டிற்கு அவசர சட்டம் கொண்டு வந்தது, மக்களை சந்திப்பது என அவரின் நடவடிக்கைகள் மூலம், மக்களின் ஆதரவை அவர் பெற்று வருகிறார். முக்கியமாக, இவை எதிலும், சசிகலா தரப்பிடம் அவர் விவாதிப்பதில்லை. இது கார்டன் தரப்பிற்கு  அதிருப்தியையும், கோபத்தையும் ஏற்படுத்தியிருப்பதாக தெரிகிறது.
 
முக்கியமாக, ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக, டெல்லி சென்று மோடியை சந்தித்த போது, மாநிலத்தின் முதல்வர் நீங்கள்.. யாருக்காகவும் பயப்பட வேண்டாம். நாங்கள் இருக்கிறோம்.. தைரியமாக செயல்படுங்கள் என மத்திய அரசு சார்பாக கூறப்பட்டதாக தெரிகிறது. இதிலிருந்துதான் ஓ.பி.எஸ் ஒரு முழுமையான முதல்வராக செயல்பட்டு வருகிறார்.
 
சென்னையில் நடந்த குடியரசு தின விழாவில் மனைவியுடன் கலந்து கொண்டார். சட்டசபையில் ஆளுநர் உரையின் போது, ஜெயலலிதாவின் இருக்கையில் அமர்ந்தார். சமீபத்தில் மதுரை சென்ற போது கூட ஜெயலலிதா தங்கும் மதுரை பாண்டியன் ஹோட்டலில், அவர் வழக்கமாக தங்கும் மாடிப்படி அறையிலேயே ஒ.பி.எஸ்-ற்கு அறை ஒதுக்கப்பட்டது. அதேபோல், பெரிய குளத்தில் நடைபெற்ற குடமுழுக்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஓ.பி.எஸ் சென்னை திரும்பிய போது, சென்னை விமான நிலையத்திலிருந்து, கிரீன்வேஸ் சாலை வரை இதுவரை இல்லாத அளவுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

முதல்வரின் இந்த நடவடிக்கைகளை கண்டு ஆடிப்போயுள்ள சசிகலா தரப்பு, அவரை பணிய வைக்கும் முயற்சியிலும், அடுத்து தான் முதல்வராக அமர்வதற்கு ஏற்ற வழிகள் குறித்தும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது.

அதோடு மட்டுமல்லாமல், சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் பேசிய திமுக துணை பொதுச்செயலாளர் துரைமுருகன் ‘5 வருடத்திற்கு நீங்களே முதல்வராக இருங்கள். உங்கள் பின்னால் உள்ள சக்தியை பார்த்துக் கொள்ளுங்கள். திமுக உங்களுக்கு ஆதரவாக நிற்கும்” என ஓ.பன்னீர் செல்வத்திடம் கூறியதை அதிர்ச்சியோடு பார்க்கிறதாம் சசிகலா தரப்பு...