வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : செவ்வாய், 6 அக்டோபர் 2015 (16:49 IST)

ஊடகங்கள் என்மனதை புண்படுத்த வேண்டாம் : விஜய் உருக்கம்

ஊடகங்களில் வெளிவந்தது போல் தான் வரி ஏய்ப்பு எதுவும் செய்யவில்லை என்றும்,தவறான தகவலை வெளியிட்டு என் மனதை புண்படுத்த வேண்டாம் என  நடிகர் விஜய் வேண்டுகோள் விடுத்திருக்கிறார் 

 
வருமான வரித்துறை அதிகாரிகள் சமீபத்தில் நடிகர் விஜயின் வீடு மற்றும் அலுவலங்களில் சோதனை நடத்தினார்கள். அச் சோதனையில் நடிகர் விஜய் கடந்த 5 வருடங்களாக வரி ஏய்ப்பு செய்திருக்கிறார் என்ற தகவல் வெளியானது. இது திரைத்துறையைச் ச் சார்ந்தவர்களுக்கு, சினிமா ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில், நடிகர் விஜய் இது குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.
 
அதில் “வருமான வரித்துறையினர் கலை உலகைச் சார்ந்த தயாரிப்பாளர்கள், நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோரின் அலுவலகங்கள் மற்றும் இல்லங்களில் சோதனையிடுவதும், தணிக்கை செய்வதும் இயல்பான ஒன்று. கடந்த வாரம் என்னுடைய இல்லத்திலும், அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் நான் வருமான வரி ஏய்ப்பு ஏதும் செய்துள்ளேனா என்று சோதனையிட்டார்கள்.
 
நானும், எனது குடும்பத்தாரும், எனது அலுவலர்களும் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்தோம். ஆனால் சில பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் நான் கடந்த நான்கைந்து ஆண்டுகளாக வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்று உண்மைக்கு புறம்பான செய்தியை கூறியுள்ளதை அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.
 
மேற்படி செய்தியில் சிறிதளவும் உண்மையில்லை. நான் சட்டத்தை மதித்து நடப்பவன். என்றும் சட்டத்துக்கு மரியாதை கொடுப்பவன். நடப்பு நிதியாண்டு வரை நான் என்னுடைய தொழில் மற்றும் வருமானம் சம்பந்தப்பட்ட கணக்கினை குறித்த நேரத்தில் உரிய வருமான வரி அலுவலகத்தில் தாக்கல் செய்து, அதற்குரிய வருமான வரியையும், சொத்து வரியையும், தொழில் வரியையும் முறையாக செலுத்தியுள்ளேன் என்பதுதான் நிதர்சனமான உண்மையாகும்.
 
மேலும் நான் எப்பொழுதும் வருமான வரித்துறைக்கு முழு ஒத்துழைப்பும் தருவேன். எனவே உண்மைக்கு புறம்பான தேவையற்ற வீண் கருத்துக்களை செய்தித்தாள்களிலோ, ஊடகங்களிலோ வெளியிட்டு என் மனதைப் புண்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.