வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : புதன், 20 செப்டம்பர் 2017 (13:47 IST)

நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தக்கூடாது - நீதிமன்றம் அதிரடி

மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


 

 
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 
 
இதில் தினகரன் தரப்பு வழக்கறிஞர் துஷ்யந்த தவே வாதாடிய போது, சபாநாயகரின் நடவடிக்கை நீதிக்கு எதிரானது எனவும், தமிழக அரசில் ஊழல் மலிந்து விட்டதால் முதல்வருக்கு அளித்த ஆதரவை எம்.எல்.ஏக்கள் வாபஸ் பெற்றார்கள் என்றும், நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறவே சபாநாயகர் இந்த முடிவை எடுத்துள்ளார். மேலும், எம்.எல்.ஏக்கள் வேறு கட்சிக்கு தாவவில்லை. எனவே, கட்சி தாவல் தடை சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது எனவும்  வாதாடினார். 
 
அதே நேரம், சபாநாயகர் தரப்பு வழக்கறிஞர் வாதாடிய போது, வழக்கிற்கு தேவையில்லாத வாதங்கள் தினகரன் தரப்பில் முன் வைக்கப்படுகிறது எனவும், இது தகுதி நீக்கத்திற்கு எதிரான வழக்கு. நம்பிக்கை வாக்கெடுப்புக்கானது அல்ல எனவும்,  10 நாட்கள் அவகாசம் வேண்டும். அதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம் என வாதாடினார்.


 

 
அதன்பின் தீர்ப்பு வழங்கிய நீதிபதி துரைசாமி, தகுதி நீக்க உத்தரவிற்கு தடை விதிக்க முடியாது எனக் கூறினர். ஆனால், திமுக தொடர்ந்த வழக்கில் வழங்கப்பட்ட  தீர்ப்பான, மறு உத்தரவு வரும் வரை நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தக்கூடாது என்ற உத்தரவு அப்படியே நீடிக்கிறது எனவும். அதுவரை, காலியாக அறிவிக்கப்பட்ட 18 தொகுதிகளுக்கும் இடை தேர்தல் அறிவிக்கக்கூடாது எனவும் தீர்ப்பளித்தார். அதோடு, வழக்கு அக்.4ம் தேதிக்கு வழக்கை தள்ளி வைத்து  நீதிபதி தீர்ப்பளித்தார்.
 
எனவே, நீதிமன்ற உத்தரவு வரும் வரை நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த முடியாத நிலை எடப்பாடி பழனிச்சாமிக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த தீர்ப்பு, தினகரன் தரப்பு எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்து விட்டு, நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தலாம் என திட்டமிட்டிருந்த எடப்பாடி தரப்பிற்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.