இடைக்கால முதல்வர் தேவையில்லை : பொன்னையன் அதிரடி
இடைக்கால முதல்வர் தேவையில்லை : பொன்னையன் அதிரடி
தமிழக முதல்வரின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருவதால் இடைக்கால முதல்வருக்கு அவசியம் இல்லை என்று முன்னாள் அதிமுக அமைச்சர் பொன்னையன் கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 22ம் தேதி முதல், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை எடுத்து வருகிறார்.
இந்த சூழ்நிலையில் தலைமை செயலாளர் ராமமோகனராவ் ஆளுநர் வித்யாசாகரை ஆளுநர் மாளிகையில் நேற்று மதியம் சந்தித்து பேசினார். அதன்பின், ராமமோகனராவ், அதிமுக அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் மீண்டும் நேற்று மாலை ஆளுநரை சந்தித்து பேசினர்.
எனவே, அரசு பணிகளை கவனிக்க, இடைக்கால முதல்வர் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு அவசியம் இல்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் கருத்து தெரிவித்துள்ளார்.
ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் “தமிழகத்தில் அரசு நிர்வாகம் சரியாக செயல்பட்டு வருகிறது. முதல்வரின் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. எனவே, இடைக்கால முதல்வருக்கு அவசியம் இல்லை. மேலும், தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி ஏற்படுத்த வேண்டிய அவசியமும் இல்லை” என்று அவர் கருத்து தெரிவித்தனர்.