ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: வெள்ளி, 6 டிசம்பர் 2019 (11:03 IST)

9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் இல்லை..

பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

3 வருடங்களுக்கும் மேலாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத நிலையில் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என அறிவித்தது. இதனிடையே மறுவரையறை பணிகள் முடிவடையாத வரை உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கூடாது என திமுக வழக்கு தொடுத்தது.

இதன் விசாரணையில் வார்டு மறுவரையறை பணிகள் முடிவடையாத நிலையில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் மட்டும் தேவைப்பட்டால் உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க முடியுமா என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.  இதற்கு மாநில தேர்தல் ஆணையம் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க தயார் என பதிலளித்தது.

இந்நிலையில் புதிதாக பிரிக்கப்பட்ட செங்கல்பட்டு, நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளகுறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்த மற்ற மாவட்டங்களில் குறிப்பிட்ட தேதியில் உள்ளாட்சி தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் அந்த 9 மாவட்டங்களில் 4 மாதங்களில் வார்டு மறுவரையறை பணிகளை முடித்து தேர்தல் நடத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வேட்பு மனு தாக்கல் நிறுத்திவைக்கப்பட்ட நிலையில், எப்போது தொடங்கும் என கேட்டபோது ”உள்ளாட்சி தேர்தல் குறித்தான தீர்ப்பை முழுமையாக ஆய்வு செய்த பிறகே அறிவிக்கப்படும்” என மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.